குடிநீருக்காக உச்சி வெயிலில் சாலையில் அமர்ந்த ஊராட்சித்தலைவர்!
மங்கலம் பகுதியில், குடிநீர் முறையாக வழங்கக்கோரி, சாலை மறியல் நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம், மங்கலம் ஊராட்சிக்கு, எல் & டி நிறுவனம் சார்பில், நாளொன்றுக்கு 13 லட்சத்து 30 ஆயிரம் லிட்டர் குடிநீர் வழங்க வேண்டும் என்று ஒப்பந்தம் உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அந்த நிறுவனமோ, கடந்த சில நாட்களாக ஒப்பந்தப்படி தண்ணீர் வழங்கவில்லை என்று தெரிகிறது.
இதனால், மங்கலம் பகுதியில் தண்ணீர் பிரச்சனை தலைதூக்கியது; பொதுமக்கள், ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டனர். கோடை காலம் என்பதால், இப்பிரச்சனைக்கு உடனடி தீர்வு ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இந்த நிலையில், ஒப்பந்தப்படி முறையாக குடிநீர் வழங்காத தனியார் நிர்வாகத்தை கண்டித்து மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி தலைமையில், மங்கலத்தில் நேற்று சாலை மறியல் நடைபெற்றது. அவருடன், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தாஹா நசீர், திருப்பூர் ஒன்றிய குழு உறுப்பினர் ஜானகி எபிசியண்ட் மணி மற்றும் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
அங்கு வந்த மங்கலம் போலீசார், சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஒப்பந்தப்படி 2 நாட்களில் குடிநீர் வழங்கப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில், ஊராட்சித் தலைவ மற்றும் பொதுமக்கள், போராட்டத்தை கைவிட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu