இறைச்சி விற்க அனுமதி: பல்லடத்தில் தேங்கிய ரூ.300 கோடி மதிப்பு கறிக்கோழிகள் விற்பனையாகுமா?
ஊரடங்கு தளர்வில், இறைச்சி விற்பனைக்கு அனுமதி தரப்பட்டுள்ளதால், பல்லடத்தில் தேங்கி கிடக்கும் ரூ.300 மதிப்பு கறிக்கோழி விற்பனையாகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
HIGHLIGHTS
தமிழகத்தில் நாமக்கல், பல்லடம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 16 ஆயிரம் கோழிப்பண்ணைகள் உள்ளன. இதில் தினசரி 10 லட்சம் கிலோ கறிக்கோழி உற்பத்தி செய்யப்பட்டு தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
கோழிப்பண்ணைகளில் 45 நாட்கள் வளர்க்கப்படும் கறிக்கோழிகளுக்கு மக்காச்சோளம், சோயா, சில்வர் மத்திகருவாடு உள்ளிட்ட தீவனம் வழங்கப்படடு வளர்க்கப்படுகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக கோழிகள் விற்பனை ஆகாமல் தேக்கமடைந்துள்ளன. இதனால், பண்ணையாளர்களுக்கு 300 கோடி இழப்பீடு ஏற்பட்டு உள்ளது.
பல்லடம் பகுதியில் 2 கோடி கறிக்கோழி உற்பத்தி செய்யப்படுகிறது. இவற்றில் 60 சதவீதம் சனி, ஞாயிறுக்கிழமைகளில் விற்பனை ஆகிறது. மற்ற நாட்களில் 40 சதவீதம் விற்பனையாகும். கடந்த மே24, ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அமலில் உள்ளது. இறைச்சிக்கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன.
கடந்த 7, ம் தேதி முதல், ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, இறைச்சி விற்க அனுமதி தரப்பட்டுள்ளது. இதனால், பல்லடம் பகுதியில் தேங்கி கிடக்கும் கறிக்கோழிகள் காலியாகுமா என்ற எதிர்பார்ப்பு, பண்ணையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இது குறித்து கோழிப்பண்ணையாளர்கள் கூறுகையில், பல்லடம் பகுதியில் மட்டும் 2 கோடி கறிக்கோழி உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த வாரம் முழுவதும் 300 கோடி மதிப்பிலான கறிக்கோழி தேங்கியது. தற்போது இறைச்சி விற்க அனுமதி தரப்பட்டுள்ளதால், 50 சதவீதம் விற்பனையாகும் என எதிர்பார்க்கிறோம் என்றனர்.