துறையூர் அருகே ஒரே நாள் இரவில் 3 வீடுகளில் நகை, பணம், பட்டுப்புடவைகள் திருட்டு

துறையூர் அருகே ஒரே நாள் இரவில் 3 வீடுகளில் நகை, பணம், பட்டுப்புடவைகள் திருட்டு

பைல் படம்.

துறையூர் அருகே ஒரே நாள் இரவில் 3 வீடுகளில் 8 பவுன் நகை, பணம், பட்டுப்புடவைகள் திருடிச்சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள ரெங்கநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் சொந்தமாக டிராக்டர் வைத்துள்ளார். நேற்று முன்தினம் மணிகண்டனின் மனைவி கரட்டாம்பட்டியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றார்.

இதையடுத்து மணிகண்டன் வீட்டை பூட்டிவிட்டு ரெங்கநாதபுரத்தில் உள்ள தனது தாய் வீட்டில் இரவில் தங்கியுள்ளார். நேற்று அவர் தனது வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 8 பவுன் நகைகள், ரூ.17 ஆயிரம் மற்றும் எல்.இ.டி. டி.வி. ஆகியவை திருட்டு போயிருந்தது தெரியவந்தது.

இதே போல் மருவத்தூர் சாலையில் உள்ள கணேசன் என்பவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் ரூ.2 ஆயிரம், 3 விலை உயர்ந்த கடிகாரங்களை திருடிச் சென்றுள்ளனர். மேலும் அருகே உள்ள சேகர் என்பவரது வீட்டில் புகுந்த மர்ம நபர்கள், அங்கிருந்த விலை உயர்ந்த பட்டுப் புடவைகளை திருடிச் சென்றனர்.

ஒரே நாள் இரவில் 3 வீடுகளில் நள்ளிரவில் நடந்த இந்த திருட்டுச் சம்பவம் குறித்து துறையூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story