கொலையானவரின் உடலை வாங்க மறுத்து திருச்சியில் உறவினர்கள் போராட்டம்

திருச்சி மாவட்டம் லால்குடி தாலுகா மாந்துறை அருகே உள்ள நெடுஞ்சாலகுடியை சேர்ந்தவர் ராபர்ட் செல்வராஜ். இவர் உறவினர் ஒருவரின் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக கடந்த ஜூலை மாதம் வாத்தலை அருகே உள்ள கல்லூருக்கு சென்றார்.
அப்போது அங்கு ஏற்பட்ட தகராறில் வைரப்பெருமாள், தனபாண்டியன், வினோத், சிவா ஆகியோர் கடப்பாரை மற்றும் ஆயுதங்களால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த ராபர்ட் செல்வராஜ் தனியார் ஆஸ்பத்திரியிலும், அதன்பிறகு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் ராபர்ட் செல்வராஜ் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி ராபர்ட் செல்வராஜின் மனைவி லீமா ரோஸ்மேரி உள்ளிட்ட அவரது உறவினர்கள் திருச்சி அரசு மருத்துவமனை முன், இன்று காலை உடலை வாங்க மறுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் அரசு மருத்துவமனை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டது. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்கை, கொலை வழக்காக மாற்றி குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து ராபர்ட் செல்வராஜின் உடலை உறவினர்கள் வாங்கிச் சென்றனர். இதனால் இன்று காலை அரசு மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu