இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள்: நடிகர் சங்கம் கடும் எச்சரிக்கை

இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள்: நடிகர் சங்கம் கடும் எச்சரிக்கை
X
நடிகை த்ரிஷா குறித்து அவதூறாக பேசிய அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜூக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

கூவத்தூர் விவகாரத்தில் நடிகை த்ரிஷா மற்றும் கருணாஸை தொடர்புபடுத்தி அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் அரசியல் அரங்கிலும், திரைத்துறையினர் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பல்வேறு தரப்பினரும் முன்னாள் அதிமுக பிரமுகர் ராஜூக்கு எதிராக கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரம் பூதாகரமானதையடுத்து ஏ.வி. ராஜூ மன்னிப்புக் கோரியுள்ளார்.

இந்த சம்பத்தை கண்டித்துத் தென்னிந்திய நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ‘தற்போது பொது வலைதளங்களில் சகோதரி த்ரிஷா, சகோதரர் கருணாஸ். குறித்து கேட்பதற்கு கூசுகின்ற, ஆதாரமற்ற, பொறுப்பற்ற, தரமற்ற, கீழ்தரமான, வக்கிரமனப்பான்மையோடு, பரவ விடப்பட்டிருக்கும் பொய்கதையை தென்னிந்திய நடிகர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. திரைத்துறையைச் சார்ந்த பிரபலங்களைப் பற்றி பொதுவெளியில் அவதூறு பரப்பி சுய விளம்பரம் தேடிக் கொள்ளும் நபர்கள் நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றனர்.

எல்லோரும் வெட்கித் தலைகுனியும்படி மீண்டும் ஒரு நிகழ்வு நிகழ்ந்துள்ளது. திரையிலும் பொதுவெளியிலும் இயங்கி வரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான நடிகர் கருணாஸ் மீதும், தனது கடின உழைப்பாலும் திறமையாலும் முன்னணி நடிகையாக திகழும் த்ரிஷா மீதும் இப்படி அபாண்டமான அவதூறை அதுவும் பொது வாழ்க்கையில் இருக்கும் நபரே தனது அரசியல் சுயலாபத்துக்காக பரப்புவது வேதனை அளிக்கிறது.

கவனத்தை ஈர்த்துக் கொள்ளவும், கேட்போரை கீழ்த்தரமானவராய் கருதியும், இத்தகைய செயல்கள் நடந்தேறுவது, இனியும் நடக்கக் கூடாத வகையில் நடிகர் சங்கம் தீவிரமான முடிவுகளை எடுக்கும். சட்ட ரீதியாய் இக்குற்றத்தை அணுகவும் செய்யும். பண்பு மென்மை காரணமாய் பிரபலங்கள் பதில் பேச மாட்டார்கள் என்கிற பலத்தை பலவீனமாக்கி விளையாடுவதை இத்தோடு நிறுத்திக் கொள்ளவேண்டும்.

தென்னிந்திய நடிகர் சங்கம் தனது கடும் கண்டனத்தை தெரிவிப்பதுடன், சட்ட ரீதியான அனைத்து நடவடிக்கைகளுக்கும் துணை நிற்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
AI மரங்களை நடவு செய்வதில் புரட்சி: சரியான இடத்தை எப்படி கண்டுபிடிப்பது?