அக்காலத்தில் கிடைத்த அழகான ஞாயிறு இனி வருமா....

அக்காலத்தில் கிடைத்த அழகான ஞாயிறு இனி வருமா....

பைல் படம்

20 வருஷத்துக்கு முன்னர் ஞாயிற்றுக்கிழமை தந்த சந்தோசமும் கொண்டாட்டமும் இப்போ எவ்வளவு பணம் கொடுத்தாலும் கிடைக்காது.

அப்போதெல்லாம் சனிக்கிழமை சாயங்காலம் வந்துட்டாலே, மறுநாள் ஞாயிற்றுக்கிழமைனு ஒரு பரபரப்பான சந்தோசம் நமக்கு வந்துடும். மற்ற நாள்ல எல்லாம், காலையில தூங்கி எந்திரிக்கவே மனசு இருக்காது. ஆனால் ஞாயிற்றுக்கிழமை காலையில மட்டும் அலாரம் வைக்காமலே ஆறு மணிக்கு முன்னாடி முழிப்பு வந்திரும். மற்ற நாளுல காலையில பெரும்பாலும் பழைய சோறு தான் இருக்கும். ஆனால் ஞாயிற்றுக்கிழமை கண்டிப்பாக இட்லியோ, தோசையோ இருக்கும். அதைச் சாப்பிட்டுட்டு, அப்பா கூட கறிக்கடைக்கு போய் கூட்டத்துல நின்னு கறி வாங்கிட்டு வர்றப்பவே நம்ம நாக்குல எச்சில் ஊற ஆரம்பிச்சிடும்.

நம்ம அம்மா அந்தக் கறியைக் கழுவ ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே, வெளிய பயலுக கூட விளையாடப் போயிருவோம். அப்பல்லாம் ஒவ்வொரு சீசனுக்கும் ஒவ்வொரு விளையாட்டு விளையாடுவோம். ஒரு டைம்ல, பம்பரம், ஒரு டைம்ல கோலிக்குண்டு, அப்பறம் டயர் உருட்டுறது, கில்லி கம்பு என அந்தந்தக் காலத்துக்கு ஏற்ப விளையாடுவோம். காலையில அவசர அவசரமா சாப்பிட்டு விளையாடப் போனோம்னா, மத்தியான சாப்பாடு கூடச் சாப்பிடாமல் விளையாடுவோம்.

நடுவுல, நம்ம பசங்க கையில இருந்து ஒரு ரூபா, இரண்டு ரூபாய்னு காசு பிரிச்சு, ரஸ்னா, பாக்கெட் ஐஸ், குச்சி ஐஸ் எல்லாம் வாங்கிச் சாப்பிடுவோம். சாயங்காலம் விளையாண்டு விட்டு லேட்டா வீட்டுக்கு வந்து, அம்மாகிட்ட திட்டு வாங்கிட்டே மத்தியானம் வச்ச கறிக்குழம்பைச் சாப்பிடும் போது தேவாமிர்தமாக இருக்கும். சாயங்காலம் ஒரு ஏழு மணி ஆகுறப்ப எல்லாம், மறுநாள் திங்கள்கிழமை ஸ்கூலுக்குப் போகணுமே னு மனசு தவிக்க ஆரம்பிச்சிடும். அரைகுறை மனசோட டிவியில போடுற படத்தைப் பார்த்துட்டு, அப்படியே படுத்துத்தூங்கிருவோம்.

மறுநாள் திங்கள்கிழமை காலையில தூங்கி எழுந்திரிக்க மனசே வராது. அன்னைக்கு முழுசும் ஸ்கூல்ல, முந்தின நாள் விளையாண்ட விளையாட்டு, பார்த்த படம் -னு ஞாயிற்றுக்கிழமை கதையைப் பற்றித் தான் பேசுவோம். அடுத்த ஆறு நாளும், எப்படா ஞாயிற்றுக்கிழமை வரும்னு நாட்களை மனதுக்குள்ளே எண்ணிக்கிட்டே இருப்போம். இப்போ எல்லாம் முன்னாடி விட மக்களுக்கு வசதிப் பெருகி இருக்கு, டெக்னாலஜி கூடியிருக்கு. ஆனால், அந்தப் பால்ய கால ஞாயிற்றுக்கிழமை சந்தோஷம் மட்டும் இப்ப வர்றதே இல்லை. இது தான் மறுக்க முடியாத அப்பட்டமான உண்மை.

Tags

Next Story