எடப்பாடிக்கு அண்ணாமலை மீது அப்படி என்ன வன்மம் ?

எடப்பாடிக்கு அண்ணாமலை மீது அப்படி என்ன வன்மம் ?
X
அண்ணாமலை வளர்ந்தால், மற்றவர்களுக்கு எப்படியோ எடப்பாடிக்கு அரசியலே அஸ்தமனம் ஆகிவிடும்.

அதிமுகவின் இரட்டை இலைச் சின்னம் கொடுத்தால் எந்த அரசியல்வாதியும் ஒரு குறிப்பிட்ட ஓட்டினைப் பெற்று விடுவார்கள். அது அந்தச் சின்னத்திற்கான மகிமை. அப்ப எடப்பாடி எதற்கு? தமிழகத்தின் பொருளாதார மண்டலமாக திகழ்ந்து வரும் கொங்கு மண்டலத்தின் பெரும்பான்மை சமூகம் கவுண்டர் சமூகம். ஜெயலலிதா மறைவுக்குப் பின் தன் சமூகம் சார்ந்த ஒருவர் முதல்வராக இருப்பதில் கவுண்டர் சமூக மக்களுக்கு ஓர் உவகை. அதைக் காட்டியே பெரிதாக வசூல் செய்து கட்சியில் தன் ஆதிக்கத்தை நிலை நாட்ட முயன்று கொண்டிருக்கிறார் எடப்பாடி.

இப்பொழுது தமிழக அரசியல் சூழல் மாறி வரும் வேளையில் அதே சமூகத்தைச் சேர்ந்த அண்ணாமலையும் முதல்வர் ஆகலாம் என்ற சூழல் உருவாகி வருகிறது. எடப்பாடிக்கு காட்பாடி தாண்டி தனியாகப் போகக் கூட தெரியாத நிலையில் அண்ணாமலைக்கு தேசிய அளவில் நல்ல தொடர்பு இருக்கிறது. கூடுதல் பலமாக மத்திய பாஜக அரசு இருக்கிறது.

நாளை சர்வதேச அளவில் தத்தம் தொழிலை விரிவாக்கிக் கொள்ள மத்திய அரசின் தொடர்பு இருந்தால் கூடுதல் பலம் என்பது கொங்கு நாட்டு தொழிலதிபர்களின் கணக்கு. எல்லாவற்றையும் விட தொழில் சம்பந்தமான பிரச்னைகளைச் சொன்னால், அதனைப் புரிந்து கொண்டு அதற்கான தீர்வினை மத்திய அரசிடம் கொண்டு சேர்க்கும் படிப்பறிவும் அண்ணாமலையிடம் இருக்கும் போது எடப்பாடி எதற்கு என்று எந்த தொழிலதிபரும் யோசிப்பார்களா இல்லையா?

எடப்பாடியா அண்ணாமலையா என்று வந்தால், கண்ணை மூடிக் கொண்டு அண்ணாமலையைத் தான் ஆதரிப்பார்கள். மற்ற அதிமுக அரசியல்வாதிகளை விட எடப்பாடிக்கு இருக்கும் ஒரேயொரு கூடுதல் தகுதி அவர் சார்ந்த கவுண்டர் சமுதாய ஆதரவு தான். அதற்கு மிகப் பெரிய தடையாக இருப்பது அண்ணாமலை. அவரை அரசியலில் வளரவிடாமல் தடுத்தாலன்றி தன்னால் இம்மி அளவுக்குக் கூட அரசியலில் வளர முடியாது என்ற ஒரே நோக்கத்தில் தான் இப்பொழுது அண்ணாமலையின் அரசியலுக்கு எதிராகச் சில்லறை வேலைகளைச்செய்து வருகிறார்.

வாழ்வா சாவா என்ற நிலையில் தான் எடப்பாடி, அண்ணாமலையை எதிர்த்துக் கொண்டிருக்கிறார். நிஜத்திலும் அவருக்கு வேறு வழியில்லை. ஆனால், ஒரு சாதாரண அரசியல்வாதியே அத்தனை தூரம் யோசித்தால், உலகத்தின் பெரிய கட்சியான பாஜக பார்த்துப் பார்த்து தேர்ந்தெடுத்து அனுப்பிய அண்ணாமலை எப்படி யோசிப்பார் என்றும் மோடிஜியும் அமித்ஷா ஜியும் எப்படியான திட்டங்களைக் கொடுத்து ஆதரவாக இருப்பார்கள் என்பதையும் அரசியல் பார்வையாளர்கள் நன்கு அறிவர். தமிழ்நாட்டு அரசியலில் பாஜகவுக்கு சிறப்பான எதிர்காலம் இருப்பது தெளிவாகத் தெரிகிறது.

அதிமுக - பாஜக இடையே சமீபகாலமாக வார்த்தை போர் நிலவி வருகிறது. அத்தோடு கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சிலர் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தது பாஜகவினரை மேலும் கோபப்படுத்தியது. கூட்டணி தர்மத்தை மீறி அதிமுக செயல்பட்டு வருவதாகக் கூறி பாஜகவினர் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர். ஒவ்வொரு வினைக்கும் கண்டிப்பாக ஒரு எதிர்வினை இருக்கும் என அதிமுகவை அண்ணாமலை கடுமையாகச் சாடியிருந்தார். தொடர்ந்து இரு கட்சியினரும் எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை ஆகியோரின் உருவப்படங்களை எரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

Tags

Next Story
application of ai in agriculture