பாலும் பேரீச்சையும் சாப்பிட்டால் என்னாகும்?

பாலும் பேரீச்சையும் சாப்பிட்டால் என்னாகும்?

பாலும், பேரீச்சையும்.

12 நாள் தொடர்ந்து பாலுடன் பேரிச்சம் பழம் சேர்த்து சாப்பிட்டா இந்த 10 விஷயம் நடக்குமாம்

இரவு தூங்கச் செல்வதற்கு முன் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பால் குடித்து விட்டு தூங்கும் பழக்கம் நம்மில் பல பேருக்கும் இருக்கும். இரவில் வெதுவெதுப்பாக பால் குடிக்கும் போது அது நல்ல தூக்கத்தை கொடுக்கும். ஆனால் வெறும் பால் மட்டும் எடுத்துக் கொள்வதற்கு பதிலாக அதோடு ஒரு பேரிச்சம் பழத்தையும் சேர்த்து சாப்பிட்டால் உடலில் நிறைய அதிசய மாற்றங்கள் நடக்குமாம். வாங்க அது என்னனு பார்த்திடுவோம்.

பால் நம்முடைய உடலுக்குத் தேவையான கால்சியத்தைக் கொடுப்பதற்கான முக்கியமான உணவாகும். அதேபோல பேரிச்சம் பழத்திலும் அதிக அளவு இரும்புச்சத்து இருக்கிறது. இவை இரண்டையும் சேர்த்து எடுத்துக் கொள்ளும்போது உடலுக்கு ஊட்டச்சத்தும் கிடைக்கும் இவை இரண்டும் சேரும்போது உருவாகிற சில மூலக்கூறுகள் உடல் ஆரோக்கியத்திலும் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும்.

தசைகள் வலிமையாக: தசைகள் உறுதியாகவும் வலிமையாகவும் இருக்க ஊட்டச்சத்து நிபுணர்கள் புரதங்கள் அதிகமாக எடுத்துக் கொள்ள அறிவுறுத்துவார்கள். அது தசைகளுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. பால் மற்றும் பேரிச்சம் பழம் இரண்டிலுமே புரதச்சத்துக்கள் அதிகமாக இருக்கின்றன. அதனால் இந்த இரண்டையும் சேர்த்து எடுத்துக் கொள்ளும் போது தசை வளர்ச்சி அதிகரிக்கும்.

பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்: நவீன மாறிவிட்ட வாழ்க்கை முறையின் விளைவுகளில் ஒன்றாக குழந்தையின்மை, ஆண்மைக் குறைபாடு, மலட்டுத்தன்மை, விறைப்புக் கோளாறு என இனப்பெருக்க மற்றும் பாலியல் ரீதியான பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் மிக அதிகம்.

இந்த பிரச்சினையை சமன் செய்யவும் பாலியல் ஆரோக்கியத்தை சீராக வைத்திருக்கவும் இனப்பெருக்க மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் பாலில் இரவில் பேரிச்சை பழத்தை சேர்த்து ஊறவைத்து குடித்து வாருங்கள்.

உடலுக்கு எனர்ஜியை கொடுக்கும்: நம்முடைய உடலுக்குத் தேவையான எனர்ஜியைக் கொடுப்பதற்கு அவசியமான குளுக்கோஸ் மற்றும் ஃப்ரக்டோஸ் ஆகிய இரண்டுமே இந்த பேரிச்சம் பழத்தில் இருக்கிறது. நாள் முழுக்க எனர்ஜியோடு இருக்க வேண்டுமென்றால் காலையில் பேரிச்சம் பழத்தை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

சிலர் காலை நேர உணவை அடிக்கடி தவிர்ப்பார்கள். அவர்கள் ஒரு டம்ளர் பாலில் 2 பேரிச்சம் பழங்களைச் சேர்த்து குடிக்க பசி கட்டுக்குள் இருக்கும். நீண்ட நேரம் வயிறு நிரம்பியிருக்கிற திருப்தியும் அதோடு உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தும் சேர்ந்தே கிடைக்கும்.

அனீமியாவை சரிசெய்யும் பேரிச்சை பால்: பேரிச்சம் பழத்தில் உள்ள பல்வேறு மினரல்கள் மற்றும் நுண்ணூட்டச்துக்களில் இரும்புச்சத்தும் ஒன்று. இந்த இரும்புச்சத்து உடல் முழுவதம் ரத்தம் சீராக கிடைக்க உதவி செய்யக் கூடியது. உடலுக்குத் தேவையான ரத்தமும் அதிலுள்ள ஹீமோகுளோபின்களும் குறைய ஆரம்பிக்கும்போது அனீமியா என்னும் ரத்த சோகை பிரச்னையை சந்திக்கிறோம்.

இந்த அனீமியாவை சரிசெய்யும் அற்புதப் பொருள் என்றே நாம் பேரிச்சை பழத்தை சொல்லலாம். தினமும் இரவு தூங்கச் செல்லும்முன் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான பாலில் 3 பேரிச்சை பழங்களைச் சேர்த்து குடித்து வர அனீமியா பிரச்சினை சரியாகி ஹீமோகுளோபினும் அதிகரிக்கும்.

சரும பிரச்சினைகள் தீரும் பேரிட்சை பால்: சருமத்தில் ஏற்படும் அழற்சி, எரிச்சல் உள்ளிட்ட பிரச்சினைகளைச் சரிசெய்ய இந்த பேரிச்சை பழம் சேர்த்த பால் உதவி செய்யும். பாலில் பேரிச்சை பழம் சேர்த்து சாப்பிடும்போது உடல் முழுவதும் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். அதனால் இயற்கையாகவே உங்களுடைய முகம் பொலிவாகிவிடும். அதனால் தினமும் இரவு தூங்கச் செல்லும்முன் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான பாலில் 2 பேரிட்சை பழத்தை சேர்த்து எடுத்துக் கொள்ள மறக்காதீங்க.

எளிமையான ஜீரணத்துக்கு பேரிச்சை பால்: உண்ணும் உணவுகள் சரியாக ஜீரணம் அடைந்தால் தான் ஜீரண மண்டலம் ஆரோக்கியமாக இருக்கும். குடல் ஆரோக்கியம் மேம்படும். அஜீரணக் கோளாறுகளால் பாதிக்கப்படுகிறவர்கள் தினமும் இரவில் பாலில் பேரிச்சை பழத்தைச் சேர்த்துக் குடிப்பதன் மூலம் ஜீரண ஆற்றல் சரியாகும். பேரிச்சை பழத்தில் உள்ள நார்ச்சத்துக்கள் ஜீரணத்தை எளிதாக்கி மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்சினைகளைத் தீர்க்கும்.

ஞாபக சக்தியை அதிகரிக்கும் பேரிச்சைபால்: ஞாபக சக்தியை அதிகரிக்கும் பாரம்பரிய உணவுகளில் வல்லாரைக்கு அடுத்ததாக இந்த பேரிச்சை பழம் சேர்த்த பாலை சொல்லலாம். நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகளைத் தூண்டி மூளையின் வளர்ச்சியை அதிகரிக்கச் செய்யும்.

தினமும் குழந்தைகளுக்கு இரவில் தூங்கச் செல்லும் முன் ஒரு டம்ளர் பாலில் இரண்டு பேரிச்சம் பழம் சேர்த்து குழந்தைகளுக்குக் கொடுக்க ஞாபக சக்தி அதிகரிக்கும். இந்த பேரிச்சம் பழத்தில் வைட்டமின் பி6 மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். குறிப்பாக காலையில் வெறும் வயிற்றில் குழந்தைகளுக்கு கொடுக்க நாள் முழுக்க சுறுசுறுப்பாக இருப்பார்கள்.

மூட்டுவலியை போக்க உதவும் பேரிச்சை பால்: பாலில் கால்சியம் அதிக அளவில் இருக்கிறது. அதில் பேரிச்சம் பழத்தையும் சேர்க்கும் போது பலன் இரண்டு மடங்காக கிடைக்கும். பாலில் பேரிச்சம் பழத்தைச் சேர்த்துக் குடிக்கும் போது மூட்டு வலி குறைவதோடு எலும்புகளின் அடர்த்தியும் அதிகரிக்கும். வலிமையாகவும் இருக்கும்.

எடை அதிகரிக்க பேரிச்சம்பழ பால்: குழந்தைகள் உடல் தேறாமல் இருப்பதை நினைத்து பெற்றோர்கள் அதிகமாக கவலைப்படுவதுண்டு. அப்படி உங்க வீட்லயும் குழந்தைங்க தேறாமலே இருந்தா இந்த பால் - பேரிச்சம் பழம் உங்களுக்கு கைமேல் பலன் கொடுக்கும். தினமும் குழந்தைகளுக்கு காலையிலும் இரவிலும் பால் கொடுப்போம். இனி இந்த பாலோடு 2 பேரிச்சம் பழத்தையும் சேர்த்து கொடுங்க. ஒரே வாரத்துல உங்கள் குழந்தையின் எடையில் நல்ல மாற்றங்கள் உண்டாகும்.

அழற்சியை போக்கும் பால் - பேரிச்சம்பழம்: பால் மற்றும் பேரிச்சம் பழம் இரண்டிலுமே மைக்ரோபியல் பண்புகள் அதிகமாக இருக்கின்றன. இவற்றை தினமும் இரவில் தூங்கச் செல்லும் முன் எடுத்துக் கொள்ளும்போது பருவ காலங்களில் ஏற்படும் தொற்றுக்கள் மற்றும் அழற்சி ஆகியவை சரியாகும். இவ்வளவு நன்மைகள் பேரீச்சம்பழத்தில் கொட்டிக்கிடக்கிறது என்பதை நம்மில் எத்தனை பேர் அறிந்திருக்கின்றனர் என்பது மில்லியன் டாலர் கேள்வி.

Tags

Next Story