சமூக வலைத்தளம் மூலம் கலக்கும் கம்பம் நகராட்சி கவுன்சிலர் சாதிக்
கம்பம் நகராட்சி கவுன்சிலர் சாதிக் தினமும் தான் செய்த பணிகளை போட்டோக்களுடன் சமூக வலைதளங்களில் பதிவிட்டு கலக்கி வருகிறார்.
HIGHLIGHTS
தேனி மாவட்டத்தில் நகராட்சிகள், பேரூராட்சிகள் உட்பட மொத்தம் 700க்கும் மேற்பட்ட வார்டு கவுன்சிலர்கள் பதவிகளுக்கு தேர்தல் நடந்து கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தவிர 130 கிராம ஊராட்சிகள், 8 ஊராட்சி ஒன்றியங்களுக்கும் கவுன்சிலர்கள், நிர்வாகிகள் உள்ளனர். இவர்களில் யாரும் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதில்லை. சிலர் மட்டும் உள்ளூர் குழுக்களில் வரும் கோரிக்கைகளை நிறைவேற்றி விட்டு சப்தம் இல்லாமல் ஒதுங்கி விடுகின்றனர். என்ன காரணமோ உள்ளாட்சி பிரதிநிதிகள் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதில்லை.
இந்நிலையில், கம்பம் கவுன்சிலர் சாதிக். இதற்கு நேர்மாறாக உள்ளார். சமூக வலைதளங்களை தன் வளர்ச்சிக்கும், மக்கள் வளர்ச்சிக்கும் முழு அளவில் பயன்படுத்தி வருகிறார். இவர் தேர்வு செய்யப்பட்ட முதல்நாளே கழிப்பறையினை தானே விலக்குமாறு, தண்ணீர், பக்கெட்டுடன் சென்று சுத்தம் செய்தார். பின்னர் நகராட்சி ஊழியர்களை அழைத்து குழாய் இணைப்புகளை சீரமைத்தார். சாக்கடையை அள்ளினார். ரோடுகளை சீரமைத்தார். மரக்கன்றுகள் நட்டார். தற்போது விபத்துக்களை தடுக்க போக்குவரத்து குறியீடுகளை நட்டு வருகிறார். ஆக தனது வார்டில் தினமும் ஏதாவது ஒரு பணிகளை செய்யாமல் இருப்பதில்லை. செய்யும் பணிகளை போட்டோ எடுத்து உடனுக்குடன் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்கிறார். இதனால் நிறைய நண்பர்களை சம்பாதித்து விட்டார். தினமும் இவரது பதிவுகளை பார்த்து பலரும் பாராட்டி வருகின்றனர்.