குடும்பத்தலைவிக்கு உரிமைத்தொகை ரூ1000 : பட்ஜெட்டில் வெளியாகும் அறிவிப்பு

குடும்பத்தலைவிக்கு உரிமைத்தொகை ரூ1000 :    பட்ஜெட்டில் வெளியாகும் அறிவிப்பு

பைல் படம்

பெண்களுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வருகிற பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறி்ப்பில் கூறியுள்ளதாவது: ‘‘அச்சமும் நாணமும் அறியாத பெண்கள் அழகிய தமிழ்நாட்டின் கண்கள்” என்று பாலின சமத்துவத்துக்காக முழங்கிய பாவேந்தரின் வரிகளால் பெண்கள் அனைவருக்கும் எனது உலக மகளிர் நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

நமது திராவிட மாடல் அரசு ஆட்சி பொறுப்பேற்றதும், முதலமைச்சராக நான் இட்ட முதல் கையொப்பமே பெண்களின் பொருளாதார சுதந்திரத்துக்கு வழிவகுக்கும் இலவச பேருந்து திட்டத்துக்காகத் தான். மூவலூர் மூதாட்டி ராமாமிர்தம் அம்மையாரின் பெயரால் பெண்கள் உயர்கல்வி பெறுவதை உறுதி செய்யும் ‘புதுமைப் பெண்’ திட்டத்தையும் தொடங்கி, கல்லூரிக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கி வருகிறோம். அதுமட்டுமின்றி, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் பயனாளிகளுக்கு வழங்கப்படும் வீடுகள் குடும்ப தலைவிகளின் பெயரிலேயே வழங்கப்படும் என்ற ஆழ்ந்த அக்கறைமிகு அறிவிப்பினையும் கடந்த ஆண்டு மகளிர் நாள் அன்று அறிவித்தேன். புதிய சிப்காட் தொழிற்பேட்டைகளில் பெண்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று அறிவித்திருக்கிறோம்.

சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பெரிய மாநகராட்சிகள் உள்ளிட்ட 11 மாநகராட்சிகளை (50 விழுக்காட்டுக்கும் மேலாக) பெண்களுக்கு ஒதுக்கி, அவர்கள் இன்று வணக்கத்துக்குரிய மேயர்களாக செயலாற்றும் நிலையை திமுக ஏற்படுத்தி இருக்கிறது. மகளிருக்கு எதிரான வன்முறைகள் - குற்றங்களை ஒழிப்பது, அவர்களுக்கு எதிரான பாகுபாட்டை நீக்குவது, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது மற்றும் சம உரிமையை நிலைநாட்டுவது ஆகிய உயர் லட்சியங்களை அடைவதற்கு “தமிழ்நாடு அரசின் மகளிருக்கான புதிய கொள்கை”யும் விரைவில் இறுதி செய்யப்பட்டு வெளியிடப்பட இருக்கிறது.

அதன் வழியாக, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தில், குடும்ப தலைவர்களாக உள்ள பெண்களுக்கு கூடுதலாக 50 நாட்கள் வேலை தருவது, முக்கிய போட்டி தேர்வுகளுக்கான பயிற்சிகளை பெண்களுக்கு வழங்குவது என பெண்களின் முன்னேற்றத்துக்கான பல சீரிய திட்டங்களை நமது அரசு செயல்படுத்த எண்ணியுள்ளது.

அனைத்துக்கும் முத்தாய்ப்பாக, வருகிற நிதிநிலை அறிக்கையில் பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்குவது குறித்த அறிவிப்பினையும் வெளியிட இருக்கிறோம். பெண்ணுரிமை என்பதை வெறும் சொற்களால் அல்ல, நித்தமும் இத்தகைய எண்ணற்ற புரட்சி திட்டங்களால் செய்து காட்டுவது தான் திராவிட மாடல் என்பதை கடந்த இரண்டு ஆண்டுகளில் நிரூபித்திருக்கிறோம்.

பெரியாரும், அண்ணாவும், பெண்ணின காவலர் கலைஞரும் பெருமை கொள்ளும் வகையில் செயல்பட்டு வருகிறோம், இனியும் பல திட்டங்களை நாட்டிற்கே முன்னோடியாக நிறைவேற்ற உள்ளோம்.

”பெண்ணடிமை தீருமட்டும் பேசுந் திருநாட்டு, மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற் கொம்பே!” என்பதை நன்குணர்ந்து பெண்ணடிமைத்தனம் அகற்றுவோம், பெண்ணுரிமை காப்போம், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி காண்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேகாலயா புதிய முதல்வருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு: இரண்டாவது முறையாக மேகாலயா மாநில முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டுள்ள சங்மா கான்ராட்க்கு எனது வாழ்த்துகள். தங்கள் பதவிக்காலம் வெற்றிகரமானதாக அமையவும், மேகாலயா மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவும் எனது வாழ்த்துகள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags

Next Story