27 ஆண்டுகளுக்கு பின்னர் பார்வை பெற்ற இசையமைப்பாளர்
![27 ஆண்டுகளுக்கு பின்னர் பார்வை பெற்ற இசையமைப்பாளர் 27 ஆண்டுகளுக்கு பின்னர் பார்வை பெற்ற இசையமைப்பாளர்](https://www.nativenews.in/h-upload/2023/09/02/1772524--.webp)
இசையமைப்பாளர் கணேஷ் 27 ஆண்டுகளுக்கு பின்னர் முழு அளவில் கண் பார்வை பெற்றுள்ளார். 1980களில் இளையராஜா மட்டுமே ஆதிக்கம் செலுத்திய காலத்தில் டி. ராஜேந்தர், கங்கை அமரன், சங்கர்- கணேஷ் போன்ற பலரும் போட்டி இசை சாம்ராஜ்யமே நடத்தி உள்ளார்கள். ஆனால் கங்கை அமரன், சங்கர்- கணேஷ் பாடல்களை கேட்கையில் அவற்றுக்கு இசையமைத்தது இளையராஜா என நாம் இன்னமும் நம்பிக் கொண்டிருக்கிறோம். அந்த அளவு அந்த பாடல்கள் மனதை கவர்ந்துள்ளன.
சங்கர்- கணேஷ் எனும் இரட்டை இசையமைப்பாளர்கள் மிக இனிமையான பாடல்களை 1980களில் கொடுத்தவர்கள். சங்கர்-கணேஷ் இரட்டையராக நானூறு படங்களுக்கும், சங்கர் இல்லாமல் கணேஷ் மட்டுமே அறுநூற்றைம்பது படங்களுக்கும் என்று மொத்தம் ஆயிரத்து ஐம்பது படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்கள். இது மலைக்க வைக்கும் செய்தி.
மிக நன்றாக சென்று கொண்டிருந்த சங்கர்- கணேஷ் வாழ்வில் மிக மோசமான திருப்பம் 1980களின் மத்தியில் வந்தது. இசையமைப்பாளர் கணேஷுக்கு பார்சலில் ஒரு டேப்ரிகார்டர் வந்தது. வாய்ப்பு தேடி இருக்கும் ஒரு பாடகர் தன் குரலை அதில் பதிவு செய்திருப்பதாகவும், அதை கேட்க சொல்லியும் அப்பார்சலில் இருந்த லெட்டரில் எழுதப்பட்டு இருந்தது. அதை நம்பி அந்த டேப்ரிகார்டர் பட்டனை அழுத்துகையில் அதில் இருந்த சக்தி வாய்ந்த குண்டு வெடித்து கணேஷின் கருவிழியும், கைவிரல்களும் பறிபோனது.
பட்டகாலிலே படும் கதையாக 1991ல் ராஜிவ் காந்தியை கொன்ற குண்டுவெடிப்பில் மீண்டும் கணேஷ் பாதிக்கப்பட்டார். அன்று ஸ்ரீபெரும்புதூர் கூட்டத்தில் சங்கர்- கணேஷ் தான் மேடையில் பாடல்கள் பாடி கச்சேரி நடத்தி கொண்டிருந்தார்கள்.
எப்படியோ இன்று 27 ஆண்டுகள் கழித்து மருத்துவ தொழில் நுட்பம் மிக முன்னேறியதால் செயற்கை கருவிழி மூலம் சென்னை தனியார் கண் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு இசைஅமைப்பாளர் கணேஷின் கண்பார்வை சமீபத்தில் முழுக்க திரும்பி உள்ளது.
இது இன்னார் இசையமைத்த பாடல் என்பதை அறியாமலேயே சங்கர்-கணேஷின் பலப்பல பாடல்களைக் கேட்டு மகிழ்ந்திருக்கிறோம். மென்னுணர்வுப் பாடல்களாயினும் சரி, வெறியாட்டப் பாடல்களாயினும் சரி... சங்கர்-கணேஷ் இசைத்தவற்றில் சிறந்த எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன. அவற்றில் சில...
யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது..
ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்..
நான் உன்னை நினைச்சேன், நீ என்னை நினைச்சே...
உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில்...
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்...
பொன் அந்தி மாலைப்பொழுது..பொங்கட்டும் இன்ப நினைவு..”
கொண்டச்சேவல் கூவும் நேரம்’
ரெண்டு கண்ணம் சந்தன கிண்ணம்,
மேகமே மேகமேவும் சங்கர் கணேஷ் தான்... இவ்வளவு இனிமையான பாடல்களை தன் ரசிகர்களுக்காக இசையமைத்தவருக்கு மீண்டும் கடவுள் அருளால் 27 ஆண்டுகள் கழித்து பார்வை கிடைக்கப்பெற்றதால் அவர் மீண்டும் இசையில் வலம் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இசைக்கு என்றுமே முடிவில்லை...என்பது போல் அவர் தன் பணியை மீண்டும் துவங்குவாரா?
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu