ஹெலிகாப்டர் சகோதரர்கள் மீது எஸ்.பி., அலுவலகத்தில் புரோகிதர்கள் புகார்
கும்பகோணத்தை சேர்ந்த புரோகிதர்களிடம் பல லட்சம் மோசடி செய்ததாக கூறி, தஞ்சை எஸ்.பி., அலுவலகத்தில் புகார்.
HIGHLIGHTS
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நிதி நிறுவனம் நடத்தி பொதுமக்கள் மற்றும் வணிகர்களிடம் பலநூறு கோடிவரை மோசடி செய்ததாக ஹெலிகாப்டர் சகோதரர்கள் என அழைக்கப்படும் எம்ஆர்கணேஷ், எம்ஆர் சுவாமிநாதன் மீது தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார்கள் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் ஹெலிகாப்டர் சகோதரர்கள் உட்பட ஐந்து பேர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இதுவரை ஹெலிகாப்டர் சகோதர்களின் மேலாளர் ஸ்ரீகாந்தன், கணக்காளர் மீரா மற்றும் ஸ்ரீராம், வெங்கடேஷன், கணேஷின் மனைவி அகிலா ஆகிய ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்நிலையில் கும்பகோணத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட புரோகிதர்களிடம் பல லட்சம் மோசடி செய்துள்ளதாக கூறி, பாதிக்கப்பட்டவர்கள் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று புகார் அளித்துள்ளனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட வெங்கட்ராமன் என்பவர் கூறுகையில், ஹெலிகாப்டர் சகோதரர்களின் கணக்காளராக பணிபுரிந்து வெங்கடேஷன் என்பவர், 200 க்கும் மேற்பட்ட புரோகிதர்களிடம் சகோதரர்களின் நிதிநிறுவனத்தில் முதலீடு செய்யும்படி கூறினார். அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு நாங்களும் குறைந்தபட்சம் இரண்டு லட்சம் முதல் பத்து லட்சம் வரை முதலீடு செய்தோம். ஆனால் முதலீடு செய்து இரண்டு வருடங்கள் ஆகிறது. இதுவரை வட்டியும் கொடுக்கவில்லை, அசலும் தரவில்லை. அலுவலகத்திற்கு சென்று பணத்தை கேட்டால் அங்கு உள்ளவர்கள் மிரட்டுவதாகவும், எனவே தங்களுடைய பணத்தை பெற்று தரவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.