கும்பகோணத்தில் ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒரு குற்றவாளி கைது

கும்பகோணத்தில் ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒரு குற்றவாளி கைது
கும்பகோணத்தில் ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒரு குற்றவாளி யை போலீஸார் கைது செய்தனர்

கும்பகோணம் பகுதி கன்னிகோயில் தெரு நீடாமங்கலம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் ராமு மகன் உச்சாணி (எ) விமல் (25). கடந்த 15ம் தேதி அவரது வீட்டருகே மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தஞ்சை மாவட்ட எஸ்.பி ரவளிபிரியா காந்தபுனேனியின் தலைமையில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் குமார் மற்றும் எஸ்எஸ்ஐ மோகன் தலைமையிலான போலீசார்களின் தீவிர தேடுதலில் கும்பகோணம் பாரதி நகரை சேர்ந்த ராவணன் மகன் தர்மராஜ் (28) என்பவரை கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் கைது செய்தனர்.

இதனைத்தொடர்ந்து திருவிடைமருதூர் டிஎஸ்பி வெற்றிவேந்தன் மேற்பார்வையில், நாச்சியார்கோவில் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரேகாராணி மற்றும் எஸ்.ஐ காமராஜ் தலைமையிலான போலீசார் கைதான தர்மராஜை விசாரணை செய்ததில், கும்பகோணம் சத்யா நகரை சேர்ந்த ராவணன் மனைவி ரேமா (44), அதே பகுதியை சேர்ந்த ராமச்சந்திரனின் மகன்கள் சதீஷ் (32), சந்தோஷ் (24) மற்றும் ஊசி மாதா கோவில் புது தெருவை சேர்ந்த குமார் மகன் விஜய் (27) ஆகியோரை கைது செய்தனர்.

மேலும் ரேமா குடும்பத்துக்கும், நீடாமங்கலம் சாலையை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் குடும்பத்துக்கும் முன்விரோதம் இருந்து வந்த நிலையில், ரேமா குடும்பத்தினர் வெங்கடேசை மிரட்டியதாக கூறப்படுகிறது. அப்போது வெங்கடேஷுக்கு ஆதரவாக அவரது நண்பரான விமல் பேசியதால் பிரேமா தரப்பினருக்கும் விமலுக்கும் முன் விரோதம் ஏற்பட்டது. இதனால் இந்த கொலை நடந்ததாக விசாரணையில் தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து கும்பகோணம் பாரதி நகரை சேர்ந்த ராவணன் மகன் சரண்ராஜ் (21) மற்றும் திருபுவனம் தெற்கு வீதியை சேர்ந்த மகாலிங்கம் மகன் ராமு (21) ஆகியோரை நாச்சியார்கோவில் இன்ஸ்பெக்டர் ரேகாராணி தலைமையிலான போலீசார் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே கடந்த 18ஆம் தேதி கைது செய்தனர்.

மேலும் கும்பகோணம் அருகே திருபுவனம் தெற்கு வீதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் குருமூர்த்தி (22) கடந்த 19 ஆம் தேதி குளித்தலை நீதிமன்றத்தில் ஆஜராகிய காரணத்தால் கரூர் கிளைச் சிறையில் 3 நாள் அடைக்கப்பட்டு இருந்தார். இதனைத் தொடர்ந்து திருவிடைமருதூர் ஒன்றியம் நாச்சியார்கோயில் போலீசார் மேற்பார்வையில் கடந்த 22ம் தேதி கும்பகோணம் நீதிமன்றத்தில் நீதிபதி தரணிதர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு கும்பகோணம் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் இந்தக் கொலையில் சம்பந்தப்பட்ட தலைமறைவாக இருந்த மேலும் ஒரு முக்கிய குற்றவாளியான திருபுவனம் அருகே நடுவக்கரை தெற்கு தெருவை சேர்ந்த ரவி மகன் அருண்குமார் (22) என்பவரை நாச்சியார்கோயில் இன்ஸ்பெக்டர் ரேகா ராணி தலைமையிலான போலீசார் கைது செய்து திருவிடைமருதூர் கிளைச் சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story