கும்பகோணத்தில் காலதாமதமாக வந்த தடுப்பூசி, அவதியடைந்த பொதுமக்கள்
தஞ்சையில் இருந்து தடுப்பூசி காலதாமதமாக கும்பகோணத்திற்கு வந்ததால், தடுப்பூசி செலுத்திக் கொள்ள குவிந்த மக்கள் அவதியடைந்தனர்.
HIGHLIGHTS
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் சிறப்பு முகாம்ங்கள் மூலம் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.
கடந்த 4 நாட்களாக தட்டுப்பாடு காரணமாக தடுப்பூசி செலுத்தப்படவில்லை, இதனால் பொதுமக்கள் முகாம்ங்களுக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இந்நிலையில் இன்று கும்பகோணம் நகராட்சி சார்பில் கோவிஷீல்டு முதல் தவணை செலுத்துபவர்களுக்காக கும்பகோணம் காரனேசன் மருத்துவமனை, யானையடி பள்ளி, சரஸ்வதி பாடசாலை பள்ளி, மஸ்ஜித் நூர் பள்ளிவாசல், மேலக்காவிரி பள்ளிவாசல் ஆகிய இடங்களில் சிறப்பு முகாம்ங்கள் அமைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தடுப்பூசி செலுத்திகொள்ள அதிகாலை முதலே ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். ஆனால் மருத்துவமனையின் கதவு திறக்கப்படாமல் பூட்டப்பட்டு இருந்தது.
இதனால் மருத்துவமனை வெளியில் சமூக இடைவெளி இன்றி ஏராளமான பொதுமக்கள் காத்திருந்தனர். மருத்துவமனை கதவு திறக்கப்படாமல் இருப்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் கேட்டபோது தஞ்சையில் இருந்து கும்பகோணம் முகாம்களுக்கு வரவேண்டிய 1,070 கோவிஷீல்டு தடுப்பூசிகள் இதுவரை வந்து சேரவில்லை எனவே தடுப்பூசிகள் வந்த பின்பு கதவு திறக்கப்படும் என கூறினார்.
பின்னர் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபடவே கதவு திறக்கப்பட்டு மருத்துவமனைக்குள் அனுமதிக்கப்பட்டனர். முண்டியடித்துக் கொண்டு உள்ளே சென்று சமூக இடைவெளி இன்றி வரிசையில் காத்திருந்தனர்.
இந்நிலையில் இதுவரை தஞ்சையிலிருந்து தடுப்பூசிகள் வந்து சேர இரண்டு மணி நேரம் காலதாமதம் ஆனதால் பொது மக்கள் வரிசையில் காத்து நின்று அவதியடைந்தனர்.