மதுக்கூர் வட்டாரத்தில் 50 சதவீத மானியத்தில் உளுந்து விதைகள் வழங்கல்
மதுக்கூர் வட்டாரத்தில் 50 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு உளுந்து விதைகளை உழவர் நலத்துறை அலுவலர்கள் வழங்கினர்.
HIGHLIGHTS
தமிழக முதல்வரின் சிறப்பு திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள டெல்டா பகுதி விவசாயிகளுக்கான நெல்லுக்கு பின் உளுந்து சாகுபடி திட்டம் தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் வட்டாரத்தில் 3500 ஏக்கர் பரப்பளவில் செயல்படுத்திட இலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் வேளாண் துறை அலுவலர்கள் அனைவரும் அனைத்து கிராமங்களிலும் உளுந்து சாகுபடி ஊக்குவிக்க முனைப்பு இயக்கம் நடத்தி விவசாயிகளுக்கு தேவையான விதை மற்றும் அதற்கான மானியங்கள் மற்றும் தேவையான தொழில்நுட்பங்களை வழங்கி வருகின்றனர்.
இதன் காரணமாக இவ்வருடம் மதுக்கூர் வட்டாரத்தில் இதுவரை 2500 ஏக்கர் உளுந்து சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாளடி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் நெல் அறுவடை நடைபெற்று வருவதை தொடர்ந்து, குறைந்த நாள் பயிரான உளுந்து சாகுபடி செய்து அதிக லாபம் பெறும் நோக்கில் விவசாயிகள் உளுந்து சாகுபடி செய்திட ஊக்கப்படுத்தப்படுகின்றனர்.
அதன் அடிப்படையில் ஊராட்சி மன்றம் தோறும் நெல்லுக்கு பின் உளுந்து சாகுபடி திட்டத்தின் கீழ் 50 சத மானியத்தில் உளுந்து விதைகளை வேளாண் உதவி அலுவலர்கள் எடுத்துக் சென்று வீடுதேடி விதைகளை வழங்கி வருகின்றனர். இன்று மோகூர் பஞ்சாயத்தில் முன்னோடி விவசாயிகள் 20 பேருக்கு தலா 8 கிலோ விதம் உளுந்து விதைகள் மானியத்தில் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் வேளாண் உதவி இயக்குனர் வேளாண் துறை அலுவலர் அன்புமணி மற்றும் வேளாண் உதவி அலுவலர்கள் பூமிநாதன் முருகேஸ் சுரேஷ் மற்றும் ஜெரால்டு உள்ளிட்ட அலுவலர்கள் விவசாயிகளுக்கு உளுந்து சாகுபடி நன்மை பற்றி எடுத்துக் கூறினார்.
ஊராட்சி மன்ற தலைவர் சுகன்யா அய்யாவு விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் வம்பன் 8 உளுந்து விதைகளை வழங்கினார். அட்மா திட்ட அலுவலர்கள் சுகிர்தா ராஜு அய்யா மணி ஆகியோர் உளுந்து சாகுபடியில் உயிர் உரத்தின் நன்மைகள் பற்றி எடுத்துக் கூறினார். வேளாண் உதவி அலுவலர் பூமிநாதன் அனைவருக்கும் நன்றி கூறினார்.