முன்னாள் அமைச்சர் தங்கமணியின் நண்பர் மகன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
சேலத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர் தங்கமணியின் நெருங்கிய நண்பரின் மகன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிகாலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
HIGHLIGHTS
அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை வருமானத்தை விட 4.85 கோடி கூடுதலாக சொத்து சேர்த்துள்ளதாக தங்கமணி, அவரது மனைவி சாந்தி மற்றும் மகன் தரணிதரன் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து, கடந்த 15 ஆம் தேதி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தங்கமணியின் பூர்வீக வீடு உள்பட 69 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
அதன் ஒரு பகுதியாக அன்று, சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தங்கமணியின் மகன் தரணிதரனின் வீடு மற்றும் ரெட்டிப்பட்டியில் உள்ள தங்கமணியின் நெருங்கிய நண்பரும் நெடுஞ்சாலை ஒப்பந்ததாரருமான குழந்தைவேலுவின் நட்சத்திர ஹோட்டல், குரங்குசாவடி பகுதியில் உள்ள அவரின் வீடு உள்பட 4 இடங்களில் இந்த சோதனையானது நடைபெற்றது.
இந்த நிலையில் இன்று தங்கமணிக்கு தொடர்புடைய சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட 14 இடங்களில் இன்று அதிகாலை முதல் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சேலத்தில் தங்கமணியின் நண்பரும் நெடுஞ்சாலை ஒப்பந்ததாரமான குழந்தைவேலு என்பவரின் மகன் மணிகண்டன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். சேலம் திருவாகவுண்டனூர் பகுதியில் உள்ள ஏவிஆர் ஸ்ரீ கோகுலம் அப்பார்ட்மன்டில் குடியிருந்து வருகிறார். இந்த நிலையில் இன்று அதிகாலை முதல் 5 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.