நவீன 'ஜியோ தொழில்நுட்பத்தில்' பில்லூர் அணை தூர்வாறும் பணி..!

நவீன ஜியோ தொழில்நுட்பத்தில் பில்லூர் அணை தூர்வாறும் பணி..!

பில்லூர் அணை (கோப்பு படம்)

பில்லுார் அணை நமது நாட்டிலேயே முதல் முறையாக நவீன தொழில்நுட்பத்தில் தூர்வாரப்படவுள்ளது.

நீலகிரி மாவட்ட எல்லையில், பில்லுார் வனப்பகுதியில், பவானி ஆற்றின் குறுக்கே உள்ளது பில்லுார் அணை. கடந்த 1961ல் கட்டத்துவங்கி, 1966ல் பயன்பாட்டுக்கு வந்தது. கொள்ளளவு 1,280 மில்லியன் கன அடி (1.280 டி.எம்.சி.). அணையின் நீர்மட்ட உயரம், 100 அடி. இந்த அணை கோவை மாவட்டம் காரமடையிலிருந்து 50 கி.மீ., தொலைவில் உள்ளது. இரு மலைகளுக்கு இடையே, 1170 அடி நீளம்; 21 அடி அகலம் கொண்டது; 3000 கன அடி தண்ணீர் வெளியேற்றி, மின்உற்பத்தி செய்யும் வகையில், 2 மின் உற்பத்தி ஜெனரேட்டர் அமைக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் ஒரு பகுதியும், மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள, கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள, மன்னார்காடு தாலுகா ஆகிய பகுதிகளில், 460 சதுர மைல் பரப்பளவு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளாகும். அணை கட்டி, 58 ஆண்டுகளாகிறது.

இதுவரை துார் வாரப்படாததால் மழைக்காலங்களில் வெள்ள நீரில், மரங்கள், சேறும் சகதியும் அடித்து வருகின்றன. தற்போது அணையில், 57 அடிக்கு சேறும், சகதியும் நிறைந்துள்ளது. இதனால், அணையின் பாதியளவுக்கு குறைவாகவே தண்ணீரை தேக்கி வைக்க முடிகிறது. பில்லுார் அணையை நம்பியுள்ள கோவை, திருப்பூர் மாநகராட்சிகள் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட குடிநீர் திட்டங்களுக்கு தண்ணீர் எடுக்க முடியவில்லை. எனவே அணையை துார் வாரியே ஆக வேண்டும் என்ற நிலைக்கு கோவை மாநகராட்சி தள்ளப்பட்டது.

தண்ணீர் வற்றிய பிறகு துார் வாரலாம் என்றால் ஆண்டில் பெரும்பாலான நாட்களில் நீர் நிரம்பி இருக்கும். இதனால் தண்ணீர் வற்றிய பின்னர் துார் வாரும் முடிவு கைவிடப்பட்டது. அணையில் தண்ணீர் இருக்கும்போதே துார் வாரும் தொழில்நுட்பத்தை பயன்படுத்த அணையை பராமரித்து வரும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் முடிவு செய்தது.

இதற்காக ஆறு மற்றும் கடல் முகத்துவாரங்களில் துார் வாரும் 'டிரெஜ்ஜர்' இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. அந்த இயந்திரம் துார்வாரி எடுக்கும் மண்ணை குழாய் வாயிலாக கொண்டு வந்து கரையில் கொட்டப்படும். ஆனால் கடல் மட்டத்திலிருந்து 1,387 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ள அணையில் துார் வாரப்படும் வண்டல் மண்ணை தரைப்பகுதிக்கு கொண்டு வருவது சவாலானது. இதை சமாளித்து பில்லுார் அணையில் துார் வாரும் பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் அணை சீரமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்ட இயக்குனர் சந்திரமோகன் கூறியதாவது:

தமிழகத்தில் உள்ள அணைகளில் துார் வாருவதற்கான முதல் நடவடிக்கையாக பில்லுார் அணையில் துார் வாரப்பட உள்ளது. அணையில் துார் வாரவேண்டுமென்றால் அதில் தண்ணீர் இல்லாத காலங்களில் பொக்லைன் கொண்டு மண்ணை எடுத்து லாரியில் ஏற்றி செல்லும் பழைய முறைதான் நடைமுறையில் உள்ளது.ஆனால் பில்லுார் அணையில் இந்தியாவிலேயே முதன்முறையாக 'ஜியோ டியுப்' தொழில்நுட்பத்தில் துார் வாரப்பட உள்ளது.

கடந்த ஜனவரி மாதம் உலக வங்கி நிதி உதவியுடன் பில்லுார் அணையில் எவ்வளவு வண்டல் மண் இருக்கிறது என்று 'பாத் மெட்ரிக்' மற்றும் 'டோபோ டிராபிக்கல் சர்வே' என்ற குளியல் அளவீட்டு ஆய்வு மற்றும் நிலவியல் ரீதியாக ஆய்வு செய்யப்பட்டது. இதில் 2 கோடியே 60 லட்சம் கன மீட்டர் வண்டல் மண் இருப்பது கண்டறியப்பட்டது.

மின்வாரியம், பொதுப்பணித்துறை, வேளாண்துறை இணைந்து இந்த திட்டத்தில் பங்கு கொண்டுள்ளன. ஆறும், கடலும் சேரும் இடமான முகத்துவாரங்களை ஆழப்படுத்துவதற்காக 'டிரெஜ்ஜர்' என்று சொல்லப்படும் இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இந்த முறையில் துார் வாரி எடுக்கப்படும் மண் கரையில் கொண்டு வந்து குழாய் வாயிலாக கொட்டப்படும்.

பில்லுார் அணையில் இந்த இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் துார் வாரி எடுக்கப்படும் மண்ணை மலைப்பகுதியில் கொட்ட முடியாது என்பது தான் சவாலான விஷயம். டிரெஜ்ஜர் வாயிலாக துார் வாரி எடுக்கப்படும் மண்ணை லாரியில் ஏற்றி மலைப்பகுதியில் இருந்து வனப்பகுதியில் உள்ள சாலைகள் வழியாக கொண்டு வர வேண்டும்.

பில்லுார் அணையில் 2 கோடியே 60 லட்சம் கன மீட்டர் வண்டல் மண் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. ஒரு லாரியில் அதிகபட்சம் 5 கனமீட்டர் மண் தான் எடுத்து வர முடியும். அதன்படி பார்த்தால் பில்லுார் அணையில் உள்ள 2 கோடியே 60 லட்சம் கனமீட்டர் வண்டல் மண்ணை தரைப்பகுதிக்கு எடுத்து வர 52 லட்சம் லாரிகள் வேண்டும்.

அதாவது 52 லட்சம் லோடு ஏற்றிய லாரிகள் பில்லுார் அணைக்கு வனப்பகுதியில் உள்ள சாலைகள் வழியாக மேலும், கீழும் சென்று எடுத்து வரவேண்டும். இத்தனை முறை வனப்பகுதிக்குள் லாரிகள் செல்ல வனத்துறை அனுமதி அளிக்காது. அப்படியே அனுமதி அளித்தாலும் லாரிகள் செல்லும் போது ஏற்படும் இரைச்சல் வன விலங்குகளுக்கு மட்டும் அல்லாமல் பொது மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

ஜியோ டியுப் தொழில்நுட்பம்

இது தவிர அணையில் துார் வாரிய மண்ணை எடுத்து எங்கே கொண்டு போய் கொட்டி வைப்பது என்பதும் மற்றொரு சவால். அவ்வளவு பெரிய இடம் அணை அருகே கிடையாது. அணைக்கு கீழேயும் அவ்வளவு பெரிய இடம் கிடையாது. எனவே இந்த மெகா திட்டத்தின் முதல் கட்டமாக 25 ஆயிரம் கன மீட்டர் வண்டல் மண்ணை மட்டும் ஜியோ டியுப் தொழில்நுட்பத்தில் எடுக்க திட்டமிடப்பட்டுஉள்ளது.

இதற்காக டிரெஜ்ஜர் இயந்திரத்தின் வாயிலாக அணையின் அடிப்பகுதியில் ஆழப்படுத்தி வண்டல் மண் எடுக்கப்படும். ஆனால் அந்த மண்ணை அணையிலிருந்து கீழே கொண்டு வராமல் ஜியோ டியுப் என்ற மெகா சைஸ் டியுப்களில் நிரப்பப்படும். இத்தகைய ஜியோ டியுப் தொழில்நுட்பம் பெரிய கால்வாய்களில் தண்ணீர் கசிவை தடுக்க பயன்படுத்தப்படுகிறது.

இதற்காக கேரளாவிலிருந்து டிரெஜ்ஜர் துார் வாரும் இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அந்த இயந்திரத்தை முழுவதுமாக கொண்டு வர முடியாது என்பதால் அதை பல்வேறு பாகங்களாக பிரித்து 20 டிரெய்லர் லாரிகளில் ஏற்றி பில்லுார் அணைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

அந்த இயந்திரம் ஒன்றாக சேர்க்கப்பட்டு பில்லுார் அணையில் மிதந்தவாறே துார் வாரப்படும். துார் வாரும் போது தண்ணீரும், வண்டல் மண்ணும் சேர்ந்து தான் எடுக்கப்படும். பின்னர் அவற்றிலிருந்து தண்ணீர் மட்டும் பிரிக்கப்பட்டு அணையிலேயே மீண்டும் தண்ணீர் விடப்படும். ஆனால் மண் மட்டும் பில்லுார் அணையின் கரையோரங்களில் வைக்கப்பட்டுள்ள ஜியோ டியுப்களில் சேகரிக்கப்படும்.

ஜியோ டியுப் என்பது ஒருவித துணி போன்றது. ஜியோ டியுப்பில் மண் அங்கேயே வைக்கப்பட்டு அணையின் கரை பலப்படுத்தப்படும். அவற்றில் புல் மற்றும் செடிகள், மரங்கள் வளர்ந்து அதுவே அணையின் கரையை பலப்படுத்தும் பாதுகாப்பு அரணாக நாளடைவில் மாறி விடும். மேலும் அந்த மண் மீண்டும் தண்ணீரில் கரைந்து அணைக்குள் செல்லாதவாறு ஜியோ டியுப் பாதுகாக்கும்.

2 கோடியே 60 லட்சம் கனமீட்டர் வண்டல் மண்ணை ஜியோ டியுப் தொழில்நுட்பம் வாயிலாக துார் வார முடியுமா என்பதை தெரிந்து கொள்வதற்கான பைலட் திட்டம் தான் இது. இது வெற்றி அடைந்தால் மொத்தம் உள்ள வண்டல் மண்ணும் துார் வாரப்படும். 25 ஆயிரம் கனமீட்டர் மண் துார் வாரப்பட்ட பின்னர் நிபுணர் குழு பரிந்துரைக்கும் முடிவின்படி இந்த திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

அணையை நம்பி 20 குடிநீர் திட்டங்கள்

பில்லுார் அணையில், 1,280 மில்லியன் கன அடி தண்ணீர் தேக்கி வைக்க முடியும். இந்த அணையில் இருந்து கோவை மாநகராட்சிக்கு, பில்லுார் முதல் மற்றும் இரண்டாவது குடிநீர் திட்டங்களுக்கு, நேரடியாக தண்ணீர் எடுக்கப்படுகிறது.தவிர மேட்டுப்பாளையம் தாலுகாவில் உள்ள நெல்லித்துறையில் இருந்து, சிறுமுகை வரை, கோவை மாநகராட்சி பில்லுார் மூன்றாவது குடிநீர் திட்டம், திருப்பூர் மாநகராட்சி இரண்டு மற்றும் மூன்றாவது குடிநீர் திட்டம், காரமடை, மேட்டுப்பாளையம் நகராட்சிகளின் குடிநீர் திட்டம், சூலுார், அன்னூர், அவிநாசி கூட்டுக் குடிநீர் திட்டம், வழியோர கிராமங்களுக்கு கூட்டுக் குடிநீர் திட்டம் என, பில்லுார் அணை மற்றும் பவானி ஆற்றில் இருந்து, 20 குடிநீர் திட்டங்களுக்கு தண்ணீர் எடுக்கப்படுகிறது.

இந்த அணை தண்ணீரை நம்பி, பல லட்சம் மக்கள் பயனடைந்து வருகின்றனர். பில்லுார் அணையின் மொத்த கொள்ளளவில் 47 சதவீதம் மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்க முடிகிறது. மீதி 57 சதவீதம் வண்டல் மண் தான் படிந்துள்ளது. இதனால் தான் கோடை காலத்தில் உள்ளாட்சிகளுக்கு குடிநீர் சப்ளை செய்ய முடியாமல் தண்ணீர் தட்டுப்பாடு நிலவியது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் தான் அணையை கட்டாயம் துார் வார வேண்டிய நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளது.

Tags

Next Story