கனமழையிலும் வறண்ட இராசிபுரம் ஏரி: நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்பா? பொதுமக்கள் கவலை

இராசிபுரம் அருகே தொடர்மழையிலும் தண்ணீர் வரத்து இல்லாமல் வறண்டு கிடக்கும் ஏரி.
கடந்த சில மாதங்களாக பருவ மழை, புயல் மழை போன்றவற்றால் நாமக்கல் மாவட்டத்தில் 30க்கும் மேற்பட்ட ஏரி குளங்கள் நிறைந்துள்ள நிலையில், ராசிபுரம் அருகே உள்ள ஏரி மட்டும், ஒரு சொட்டு நீரின்றி வறண்டு காணப்படுவதால் பொதுமக்கள் மிகவும் வேதனையடைந்துள்ளனர்.
இராசிபுரம் - சேலம் மெயின் ரோட்டில், வருவாய்த்துறைக்கு சொந்தமான பெரிய ஏரி சுமார் 80 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, இராசிபுரம் பகுதியில் மிக முக்கிய ஏரியான இந்த ஏரிக்கு மழைகாலங்களில் நீர் வரத்து அதிகரித்து ஏரி நிரம்பும்.
இந்த ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர் அணைப்பாளையம், சி.எஸ்.புரம், கவுண்டம்பாளையம், தட்டான்குட்டை போன்ற ஏரிக்கு சென்று நிரம்பும். கடந்த காலங்களில் இந்த ஏரிக்கு, அலவாய்மலை, போதமலை பகுதியில் இருந்து மழை நீர் வந்துகொண்டிருந்தது. இந்த ஏரியின் தண்ணீரை பயன்படுத்தி சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகள் நெல், கரும்பு, வாழை, சின்ன வெங்காயம், கிழங்கு, சோளம் உள்ளிட்டவற்றை பயிர் செய்து வந்தனர்.
இப்பகுதியின் முக்கிய ஏரியாக விளங்கிய, இந்த ஏரிக்கு மழை தண்ணீர் வரும் நீர் வழிப்பாதை ஆங்காங்கே ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால், தண்ணீர் வரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. சுமார் 80 ஏக்கர் பரப்பளவுள்ள இந்த ஏரி தற்போது படிபடியாக குறைந்த பரப்பளவும் சுருங்கிவிட்டது. நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்பால் மழை பெய்தாலும் ஏரிக்கு தண்ணீர் வருவதில்லை. இதனால் ஏரி குட்டையாக மாறியுள்ளது. இந்த ஏரி கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் ஒரு முறை நிரம்பியது. அதன் பின்னர் நீர்வரத்து என்பது துளியும் இல்லை.
மழைக்காலங்களில் கூட ஏரி முழுமையாக நிரம்புவதில்லை. இதனால், இந்த ஏரியை நம்பி பாசனம் செய்து வந்த விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரி, குளம், குட்டை மற்றும் ஓடை ஆக்கிரமிப்புகள் மீது மாவட்ட நிர்வாகம் உடனடி கவனம் செலுத்தி, நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர் நிலைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu