பரமத்திவேலூர் ஏலசந்தையில் வாழைத்தார் விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

பரமத்திவேலூர் ஏலசந்தையில் வாழைத்தார்  விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி
X

விற்பனைக்கு வந்த வாழைத்தார்கள்.

பரமத்தி வேலூர் ஏலச் சந்தையில் வாழைத்தார்களின் விலை உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நாமக்கல் :

பரமத்தி வேலூர் ஏலச் சந்தையில் வாழைத்தார்களின் விலை உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தாலுக்காவில் காவிரிக் கரையோர பகுதிகளான வெங்கரை, குச்சிபாளையம், பொத்தனூர்,வேலூர், அனிச்சம்பாளையம், நன்செய்இடையாறு, பாலப்பட்டி மற்றும் மோகனூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் வாழை சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு விளைவிக்கப்படும் வாழைத்தார்கள் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம், கோவை, ஈரோடு ,கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக லாரிகள் மூலம் அனுப்பப்படுகிறது.

சிறு விவசாயிகள் பரமத்தி வேலூரில் நடைபெறும் வாழைத்தார் ஏல விற்பனை சந்தைக்கு வாழைத்தார்களை நேரடியாகக் கொண்டு வந்து ஏலம் மூலம் விற்பனை செய்து வருகின்றனர். கொரோனா தொற்று காரணமாக தற்போது திங்கள், புதன், மற்றும் சனிக்கிழமை ஆகிய 3 நாள்கள் மட்டும் வாழைத்தார் ஏலம் நடைபெறுகிறது.

புதன்கிழமை நடைபெற்ற ஏலத்தில் பூவன், ரஸ்தாளி, பச்சைநாடன் ரக வாழைத்தார்கள் அதிகபட்சமாக ரூ. 250 க்கு விற்பனையானது. கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ. 350க்கும், மொந்தன் ரக வாழைக்காய் ஒன்று ரூ.3க்கும் விற்பனையானது. சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் 800 வாழைத்தார்கள் விற்பனைக்கு வந்தன. அவற்றில் பூவன், ரஸ்தாலி மற்றும் பச்சைநாடன் வாழைத்தார்கள் அதிகபட்சமாக ரூ.300 க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ. 400க்கும் விற்பனையானது. மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ. 3-க்கு விற்பனையானது. வாழைத்தார்கள் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story
the future of ai in healthcare