ப.வேலூர் அருகே வக்கீல் வீட்டில் ரூ.30 ஆயிரம் பணம் கொள்ளை
ப.வேலூர் அருகே பகல் நேரத்தில் பூட்டப்பட்டிருந்த வக்கீல் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.30 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
HIGHLIGHTS
பரமத்திவேலூர் அருகே உள்ள நன்செய் இடையாறு பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன் (31). வக்கீல். இவருடைய மனைவி மோகனப்பிரியா (28). இவர் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்தியில் ஜூனியர் அசிஸ்டெண்டாக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று, இருவரும் வீட்டை பூட்டிவிட்டு நாமக்கல்லில் நடைபெற்ற உறவினர் வீட்டு விசேஷத்திற்காக சென்றிருந்தனர். மாலை, அவர்கள் திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைக்கப்பட்டிருந்த பணம் ரூ.30 ஆயிரம் திருட்டுப் போனது தெரியவந்தது. இதுகுறித்து பார்த்திபன் ப.வேலூர் போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து சம்பவ இடத்த்திற்கு வந்த போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள், கைரேகைகளை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீடுகள் அதிகமுள்ள பகுதியில், பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து பணத்தை திருடிச்சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.