சேந்தமங்கலத்தில் 70 ஆண்டு பழமையான தெப்பக்குளம், புதிய நடைப்பயிற்சி பூங்கா உருவாக்கம்

சேந்தமங்கலத்தில் பிரசித்தி பெற்ற ஆயிரம் ஆண்டுகள் பழமையான சோமேஸ்வரர் கோவில் அருகே அமைந்துள்ள பெரிய தெப்பக்குளத்தை சுற்றி நடைப்பயிற்சி பூங்கா அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வரலாற்று சிறப்புமிக்க இந்த தெப்பக்குளத்தில் சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு வரை சோமேஸ்வரர் கோவில் திருவிழாவின் போது தெப்பத் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வந்தது. கொல்லிமலையில் பெய்யும் மழைநீர் இந்த குளத்திற்கு வரும் வகையில் சிறப்பான நீர்வழிப்பாதை அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் காலப்போக்கில் குளத்திற்கு நீர் வரும் பாதை ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி, குளத்திற்கு தண்ணீர் வருவது முற்றிலும் நின்றுபோனது. இதன் காரணமாக தெப்பத்திருவிழா நடத்துவது நிறுத்தப்பட்டதுடன், அழகான இந்த தெப்பக்குளம் சேந்தமங்கலம் டவுன் பஞ்சாயத்தின் கழிவுநீர் கலக்கும் இடமாக மாறி துர்நாற்றம் வீசும் நிலைக்குத் தள்ளப்பட்டது. இந்த அவலநிலையை சரிசெய்யும் முயற்சியாக சில மாதங்களுக்கு முன்பு டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் 14 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் விரிவான தூர்வாரும் பணியை மேற்கொண்டு முடித்தது. இப்பணிக்குப் பின்னர் மழைக்காலத்தில் குளத்தில் நீர் தேங்கியதால் பவுர்ணமி தினங்களில் பக்தர்கள் சோமேஸ்வரருக்கு பூஜை செய்து, தீபமேற்றி வழிபடும் பழக்கம் மீண்டும் துவங்கியது. தற்போது குளத்தை மேலும் பாதுகாக்கும் வகையில், நான்கு அடி உயரத்திற்கு கம்பிவேலி அமைக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. இப்பணிகளைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு காலை மற்றும் மாலை நேரங்களில் நடைபயிற்சி மேற்கொள்ள வசதியாக எட்டு அடி அகலத்தில் 'பேவர் பிளாக்' கற்கள் பதிக்கப்பட்டு முழுமையான நடைபயிற்சி பூங்காவாக மாற்றப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu