மோகனூர் அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
மோகனூர் அருகே வீடு கட்டப்பணம் இல்லாததால் விரக்தியடைந்து வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
HIGHLIGHTS
மோகனூர் அருகே உள்ள குமரிபாளையம் பஞ்சாயத்து, சங்கரம்பாளையம் காலனியைச் சேர்ந்தவர் சிங்காரவேலு (53). இவருக்கு சவுந்தரராஜன், இளையராஜா, விமல்ராஜ் ஆகிய 3 மகன்கள் இருந்தனர். சிங்காரவேலு, அவருடைய மனைவி மற்றும் 3 மகன்கள் என 5 பேர் ஒரு சிறிய வீட்டில் வசித்து வந்தனர். அந்த வீட்டில் 5 பேரும் ஒன்றாக வசிக்க போதிய வசதிகள் இல்லாத நிலையில், வீடு கட்டும் முயற்சியில் குடும்பத்தினர் ஈடுபட்டு வந்தனர். ஆனால் வீடு கட்ட போதிய பண வசதி இல்லாமல் அவர்கள் தடுமாறி வந்தனர். இதனால் சிங்காரவேலுவின் 2வது மகன் இளையராஜா (22) கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார்.
இந்த நிலையில் இளையராஜா, நேற்று வீட்டின் அருகில் உள்ள விநாயகர் கோயில் பகுதியில் விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். மயங்கிக் கிடந்த அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு மோகனூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட இளையராஜா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து மோகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.