நாமக்கல் உழவர் சந்தையில் கடும் சகதியில் காய்கறி விற்பனை: பொதுமக்கள் வேதனை

நாமக்கல் உழவர் சந்தையில் தேங்கியுள்ள மழைநீர்.
நாமக்கல் பார்க் ரோடு பகுதியில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விளையும் காய்கறிகளை விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். இந்த சந்தையில் தற்போது கொரோனா பரவலை தடுக்கும் வகையில் 50 சதவீத விவசாயிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். அதாவது ஒருநாள் விட்டு ஒருநாள் விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளையும் பொருட்களை விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது.
இந்நிலையில் கேரட், வெங்காயம் உள்ளிட்ட இங்கிலிஷ் காய்கறிகள் விற்பனை செய்ய உழவர் சந்தையின் இடது புறம் தரைத்தளம் ஒதுக்கப்படுகிறது. கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் மழையால், இப்பகுதியிலங் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக உள்ளது. விவசாயிகள் அதில் தார்பாய் விரித்து தாங்கள் கொண்டு வந்துள்ள காய்கறிகளை விற்பனை செய்து வருகின்றனர். ஆனால் காய்கறிகள் வாங்கச் செல்லும் பொதுமக்கள் சேற்றில் நடந்து காய்கறிகள் வாங்கும் அவல நிலை ஏற்படுகிறது.
இதுகுறித்து காய்கறி விற்பனை செய்யும் விவசாயிகள் கூறுகையில், நாமக்கல் உழவர் சந்தையில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் 50 சதவீத விவசாயிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். இதனால் உழவர் சந்தையில் உள்ள கடைகள் காலியாக உள்ளது. ஆனால் கேரட், வெங்காயம் உள்ளிட்ட இங்கிலீஸ் காய்கறிகள் விற்பனை செய்பவர்களுக்கு ஆரம்பத்தில் கடைகள் ஒதுக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் எவ்வித சிரமமும் இன்றி காய்கறிகள் வாங்கிச்சென்றனர்.
ஆனால் தற்போது எங்களுக்கு உழவர் சந்தையின் இடது புறம் தரையில் காய்கறிகள் விற்பனை செய்ய இடம் ஒதுக்கப்படுகிறது. மழைக்காலமாக உள்ளதால் சேற்றில் அமர்ந்து காய்கறிகள் விற்பனை செய்யும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. உழவர் சந்தையில் கடைகள் காலியாக இருந்தாலும் அதிகாரிகள் அந்த கடைகளை எங்களுக்கு ஒதுக்கீடு செய்வதில்லை.. இதுகுறித்து நாங்கள் அதிகாரிகளிடம் பல்வேறு முறை தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் காய்கறிகள் வாங்க பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
மேலும் உழவர் சந்தையில் சேற்றில் நடந்து வந்து காய்கறிகள் வாங்க பொதுமக்கள் விரும்புவதில்லை. இதனால், எங்களுக்கு காய்கறிகள் விற்பனை குறைந்துள்ளது. எனவே உழவர் சந்தையில் உள்ள அதிகாரிகள் காலியாக உள்ள கடைகளை எங்களுக்கு ஒதுக்கி காய்கறி விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu