ஜமாபந்தியில் பட்டா கேட்டு மனு அளித்தவர்களுக்கு உடனடியாக பட்டா நகல்: கலெக்டர் அசத்தல்

நாமக்கல் தாலுகா ஆபீசில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில், பட்டா நகல் கேட்டு மனு கொடுத்தவர்களின் மனுவை பரிசீலனை செய்த கலெக்டர் உமா, அவர்களுக்கு உடனடியாக பட்டா நகலை வழங்கி அசத்தினார்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 8 தாலுகா அலுவலகங்களிலும் நேற்று 15ம் தேதி முதல் வருவாய் தீர்வாயம் எனும் ஜமாபந்தி நிகழ்ச்சி துவங்கியது. நாமக்கல் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில், செல்லப்பம்பட்டி, களங்கானி, ஏளூர், தாளம்பாடி, தத்தாத்திரிபுரம் குரூப், கரடிப்பட்டி குரூப், உடுப்பம் குரூப், மின்னாம்பள்ளி மற்றும் பாப்பிநாயக்கன்பட்டி ஆகிய வருவாய் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, ஸ்மார்ட் ரேஷன் கார்டு உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை கலெக்டரிடம் வழங்கினார்கள். மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை எடுத்து வருவாய் தீர்வாயம் முடிவதற்குள் சம்மந்தப்பட்ட மனுக்களுக்கு தீர்வு வழங்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். பட்டா நகல் வேண்டி விண்ணப்பித்தவர்களின் மனுவை பரிசீலனை செய்த கலெக்டர் உடனடியாக பட்டா நகல் வழங்கி அசத்தினார்.
நிகழ்ச்சியில் விஏஓக்களிடம் உள்ள பதிவேடுகளை தனித்தனியே பார்வையிட்டு கலெக்டர் ஆய்வு மற்கொண்டார். வேளாண்மை துறை, தோட்டக்கலைத்துறை, புள்ளியியல் துறை அலுவலர்கள் தங்கள் பகுதியில் உள்ள விவசாய சாகுபடி பயிர்கள் குறித்த விவரங்களை அவ்வப்போது கிராம நிர்வாக அலுவலர்கள் வைத்துள்ள பதிவேடுகளில் சரியான முறையில் பதிவேற்றம் செய்யப்படுவதை உடனுக்குடன் மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். பொதுமக்கள் தங்கள் கிராமங்களுக்கான ஜமாபந்தி நாளில் தங்களின் கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம் என கலெக்டர் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu