நேட்டிவ் நியூஸ் தமிழ் செய்தி எதிரொலி, நாமக்கல் புதிய பஸ் நிலையத்தில் வாகனம் நிறுத்துவதற்கான கட்டணம் குறைத்து அறிவிப்பு: கலெக்டருக்கு பொதுமக்கள் பாராட்டு
நாமக்கல் புதிய பஸ் நிலையத்தில் உள்ள பார்க்கிங் ஸ்டேண்டில், வாகனங்கள் நிறுத்துவதற்கான கட்டணம் குறித்து மாநகராட்சி மூலம் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் புதிய பஸ் ஸ்டாண்டில், டூ வீலர்கள் நிறுத்துவதற்கு ஒப்பந்ததாரர் தன்னிச்சையாக ரூ. 5 கட்டணம் உயர்த்தியது குறித்து நேட்டிவ் நியூஸ் செய்தி தளத்தில் செய்தி வந்தவுடன், மாவட்ட கலெக்டர் எடுத்த அதிரடி நடவடிக்கையால் கட்டணம் குறைக்கப்பட்டு, மாநகராட்சி சார்பில் கட்டண விபரம் குறித்து போர்டு வைக்கப்பட்டுள்ளது.
நாமக்கல், முதலைப்பட்டியில், மாநகராட்சி சார்பில் புதிய பஸ் ஸ்டேண்ட் கடந்த நவ. 10ம் தேதி முதல் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து புதிய பஸ் ஸ்டாண்ட் சுமார் 6 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது.
இதனால் வெளியூர் செல்வதற்காக பஸ் ஸ்டாண்ட் செல்லும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர், ஆசிரியர்கள், அரசு பணிக்கு செல்வோர், கூலி தொழிலாளர்கள், வியாபாரிகள் உள்ளிட்ட அனைவரும் நாள்தோறும், தங்களது டூ வீலர்களில் புதிய பஸ் ஸ்டாண்ட் வரை சென்று அங்குள்ள மாநகராட்சி டூ வீலர் பார்க்கிங் மையத்தில் தங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு, அங்கிருந்து பஸ் மூலம் வெளியூர் சென்று திரும்பி வருகின்றனர்.
நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான டூ வீலர்கள் புதிய பஸ் நிலைய பார்க்கிங் மையத்திற்கு வருவதால், அங்கு அமைத்துள்ள ஷெட் போதாமல் ஏராளமான வாகனங்கள் கடும் வெய்யிலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மாநகராட்சி பஸ் நிலையத்தில் உள்ள டூ வீலர் பார்க்கிங் மையம், மாநகராட்சி மூலம் டெண்டர் விடப்பட்டு ஒப்பந்ததாரர் மூலம் நடத்தப்படுகிறது. பஸ் நிலையம் துவங்கிய நவ. 10ம் தேதி முதல் ஒரு டூ வீலருக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 10 வீதம் கட்டணம் வசூலிக்கப்பட்டது. கடந்த ஜன. 1ம் தேதி காலை முதல் திடீரென்று ஒரு டூ வீலருக்கு ரூ. 5 உயர்த்தி, நாள் ஒன்றுக்கான கட்டணம் ரூ. 15 ஆக நிர்ணயிக்கப்பட்டு ஒப்பந்ததாரர்கள் வசூலித்தனர். இதற்காக வழங்கப்படும் ரசீதில் கட்டணத் தொகை எவ்வளவு என்பது குறிப்பிடப்படவில்லை.
இது குறித்து கடந்த 8ம் தேதி நேட்டிவ் நியூஸ் செய்தி தளத்தில் செய்தி வெளியானது. இதையொட்டி மாவட்ட கலெக்டர் உமா உடனடியாக நடவடிக்கை எடுக்க, மாநகராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார். மாநகராட்சி நிர்வாகத்தினர், பஸ் நிலைய பார்க்கிங் ஸ்டேண்டு உரிமையாளரிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது என்று எச்சரித்தனர். மேலும், மாநகராட்சி சார்பில் டூ வீலர் நிறுத்துவதற்கு கட்டணம் ரூ. 10 என்றும், கார்கள் நிறுத்துவதற்கு கட்டணம் ரூ. 25 என்று போர்டு வைக்கப்பட்டுள்ளது. கலெக்டரின் விரைவான நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu