வரும் 10ம் தேதி முதல் நாமக்கல் புதிய பேருந்து நிலையம் செயல்பட துவங்கும்: கலெக்டர்

பட விளக்கம் : நாமக்கல் புதிய பஸ் நிலையத்தை செயல்படுத்துவது சம்மந்தமான ஆலோசனைக் கூட்டத்தில், கலெக்டர் உமா பேசினார்.
வரும் 10ம் தேதி முதல் நாமக்கல் புதிய பஸ் நிலையம் செயல்பட துவங்கும்: கலெக்டர்
நாமக்கல்,
நாமக்கல் புதிய பஸ் நிலையம் வருகிற 10ம் தேதி முதல் செயல்படத்துவங்கும் என கலெக்டர் அறிவித்துள்ளார்.
நாமக்கல் கலெக்டர் ஆபீசில், சமீபத்தில் தமிழக முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டுள்ள, புதிய பஸ் நிலையத்தை செயல்படுத்துவது சம்மந்தமான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாநகராட்சி மேயம் கலாநிதி முன்னிலை வகித்தார். கலெக்டர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்துப் பேசியதாவது:
நாமக்கல், முதலைப்பட்டியில், ரூ. 19.50 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய மாநகராட்சி பஸ் நிலையம் கடந்த அக். 22 ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அனைத்து புறநகர் பஸ்களும், புதிய பஸ் நிலையத்திற்கு சென்று வரும் வகையில், பொதுமக்களுக்கு சிரமமின்றி மாற்றப்பட வேண்டும். பஸ் நிலையத்தில் வீடியோ மூலம் பஸ்களின் நேரம் குறித்த அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். விபத்துகளை தவிர்க்க பஸ் நிலைய பகுதியில் ஆங்காங்கே தேவைக்கு ஏற்ப வேகத்தடையினை அமைக்க வேண்டும். மக்களுக்கு பயன்படும் வகையில் 5 இடங்களில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும்.
பஸ் நிலையத்தில் உள்ள அனைத்து கடைகளும், பஸ் நிலையம் பயன்பாட்டிற்கு வந்தவுடன் மக்களுக்கு பயன்படும் வகையில் உடனடியாக இயங்க வேண்டும். பழைய பஸ் நிலையத்தில் இருந்து, ராசிபுரம் சென்று திரும்பும் அனைத்து டவுன் பஸ்களும் புதிய பஸ் நிலையத்திற்குள் சென்று வர வேண்டும்.
பழைய பஸ் நிலையத்திலிருந்து புதிய பஸ் நிலையம் செல்ல 10 நிமிடத்திற்கு ஒரு முறை என அரசு மற்றும் தனியார் பஸ்கள் மொத்தம் 117 முறை தினசரி இயக்கப்படும். பழைய பஸ் நிலையம் முதல், புதிய பஸ் நிலையம் வரை டவுன் பஸ் கட்டணம் ரூ. 7 ஆகவும், மொபசல் பஸ்களில் சாதாரண கட்டணம் ரூ. 7 ஆகவும், எக்ஸ்பிரஸ் பஸ் கட்டணம் ரூ.10.00 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஈரோட்டில் இருந்து வரும் பஸ்கள் நாமக்கல்-திருச்செங்கோடு ரோட்டில் இருந்து, சேலம் ரோட்டில் திரும்பி வந்து புதிய பஸ் நிலையம் செல்ல வேண்டும்.
இதன்படி, வருகின்ற 10ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் நாமக்கல் புதிய பஸ் நிலையத்தில் அனைத்து வெளியூர் பஸ்களும் இயக்கப்படவுள்ளது. பொதுமக்களுக்கு சிரமமின்றி பயணங்களை மேற்கொள்ள கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை நியமிக்க வருவாய்த்துறை, காவல்துறை, மாநகராட்சி, போக்குவரத்துத்துறை உள்ளிட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும். பஸ் பயணத்தின் போது மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளை புகார் தெரிவிக்க காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை தங்களுடைய புகார்களை நாமக்கல் மாநகராட்சி அலுவலகத்தின், கட்டுப்பாட்டு அறையின் 1800 599 7990 என்ற இலவச தொலைப்பேசி எண்ணிலும், மாவட்ட கலெக்டர் ஆபீஸ் கட்டுப்பாட்டு அறையின் 1800 425 1997 எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என அவர் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu