நாமக்கல்லில் சர்வதேச மகளிர் தின விழா : அனைத்துறை துறை பெண் அலுவலர்கள் பங்கேற்பு

நாமக்கல்லில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின விழாவில், கலெக்டர் உமா கலந்துகொண்டு கேக் வெட்டினார்.
நாமக்கல்,
நாமக்கல் கலெக்டர் ஆபீசில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின விழாவில் அனைத்து அரசுத் துறை பெண் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
கலெக்டர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, கேக் வெட்டி விழாவை துவக்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் நாள் சர்வதேச மகளிர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மகளிராகிய நாம் அனைவரும் பல்வேறு துறைகளில் பல்வேறு பதவிகளில் சிறப்பாக பணியாற்றி வருகிறோம். பெண்களாகிய நாம் தாயாக, சகோதரியாக நம் குழந்தைகளுக்கு நல்லவற்றை கற்றுக் கொடுக்க வேண்டும். பெண்களாகிய நமக்கு அலுவலத்தையும், வீட்டையும் சரியாக வழிநடத்தி செல்லும் திறமை உள்ளது. பெண் குழந்தைகளுக்கு ஆண்கள் தான் பாதுகாப்பு அளிக்க வேண்டுமென்று சிறு வயதிலிருந்தே கற்றுக் கொடுக்க வேண்டும். மேலும், பெண் குழந்தைகளுக்கு எதிராக பல்வேறு குற்ற செயல்கள் நடைபெற்று வருவது வருத்தத்திற்குரிய ஒன்றாகும். ஆண், பெண் குழந்தைகளின் பாலின சமத்துவத்துத்தை நாம் உருவாக்கிட வேண்டும். ஆண், பெண் அனைவரும் சமம் தான். இன்று நாம் எத்தகைய உயர்பதவியில் இருப்பினும், நம் குழந்தைகள் எந்த உயரத்திற்கு செல்கிறார்கள் என்பது தான் நம் வெற்றி. வேலையை நாம் அனைவரும் முழு ஈடுபாட்டுடன் செய்திட வேண்டும். பெண்கள் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளித்து நல்ல ஊட்டசத்து மிக்க உணவை உட்கொள்ள வேண்டும். 40 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் காட்டாயம் மருத்துவ பரிசோதனைகள் செய்து கொண்டு உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்திட வேண்டும் என்று கூறினார்.
நிகழ்ச்சியில் ஆர்டிஓக்கள் நாமக்கல் சாந்தி, திருச்செங்கோடு சுகந்தி, மாவட்ட சமூக நல அலுவலர் காயத்திரி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சந்தியா, வேளாண்மை இணை இயக்குநர் கலைச்செல்வி, தோட்டக்கலைத் துணை இயக்குநர் புவனேஷ்வரி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் கிருஷ்ணவேணி, மாவட்ட தொழில் மைய பொது சகுந்தலா உட்பட அனைத்து துறை பெண் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu