தமிழக அளவில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்ட 5 மாவட்டங்களில் நாமக்கல்லும் ஒன்று : கலெக்டர் பகீர் தகவல்

நாமக்கல் பிஜிபி வேளாண் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற உயிரியல் பன்முகத்தன்மைக்கான சர்வதேச விழிப்புணர்வு தின விழாவில் கலெக்டர் உமா மரக்கன்றுகளை நட்டார்.
நாமக்கல்,
நாமக்கல் பிஜிபி வேளாண் அறிவியல் கல்லூரியில் உயிரியல் பன்முகத்தன்மைக்கான சர்வதேச விழிப்புணர்வு தின விழா நடைபெற்றது. நாமக்கல் கோட்ட வன பாதுகாகாவலர் கலாநிதி முன்னிலை வகித்தார். கலெக்டர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்துப் பேசியதாவது:
ஒவ்வொரு ஆண்டும் மே 22 ஆம் தேதி சர்வதேச உயிரியில் பல்வகைத்தன்மைக்கான விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இயற்கையை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை இளம் தலைமுறையினரிடையே கொண்டு சேர்க்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் வேளாண்மை கல்லூரி மாணவ, மாணவிகள் மூலம், டிஜிட்டல் முறையில் பயிர் சாகுபடி பரப்பு கணக்கீடு, 100 சதவீதம் சிறப்பாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில் கோவை மாவட்டத்தில் ஒரு காட்டு யானை உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது. யானையை பிரேத பரிசோதனை மேற்கொண்ட போது அதன் வயிற்றில் கருவுடன் பிளாஸ்டிக் கழிவுகளும் இருந்தது என கண்டறியப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் கழிவுகள் விலங்குகளின் வாழ்வாதாரத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்குகிறது. எனவே, நாம் அனைவரும் இயற்கை வளத்தினை பாதுகாப்பதோடு பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்த்திடவேண்டும். பிளாஸ்டிக் கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிப்படைவதோடு, மழைநீர் நிலத்திற்குள் செல்லாமல் தடுக்கப்படுகிறது. இதன் காரணமாக நிலத்தடி நீர்மட்டமும் பாதிப்படைகிறது. குறிப்பாக, குறிப்பாக இந்தியாவில் மொத்தம் 148 மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 12 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. அதில் முதல் 5 மாவட்டங்களில் நாமக்கல் இடம்பெற்றுள்ளது. எனவே, அனைத்து வகையிலும் இயற்கைக்கு எதிரான பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக எளிதில் மக்கக்கூடிய இயற்கை வளம் சார்ந்த மாற்றுப் பொருட்களை பயன்படுத்திட வேண்டும்.
நாமக்கல் மாவட்டம் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில் புரிய கூடிய மாவட்டம் ஆகும். குறிப்பாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நிலத்தடி நீரை பயன்படுத்தி விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. பருவமழை காலங்களில் கிடைக்கப் பெறும் மழைநீரை முழுவதுமாக சேகரித்து நிலத்தடி நீர் மட்டத்தினை உயர்த்திட அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். கொல்லிமலையில் வளமிகு வளர்ச்சித்திட்டத்தின் கீழ் வனத்துறையின் சார்பில் காப்பு காடுகளில் உள்ள நீரோடைகளில் தடுப்பணைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக தடுப்பணை அமைக்கப்பட்டுள்ள சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. இதுபோன்று ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் முன்னெடுத்து வருகிறது, இதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu