விசைத்தறி கூடம் மூடல்: வறுமையில் தொழிலாளர்கள்

விசைத்தறி கூடம் மூடல்: வறுமையில் தொழிலாளர்கள்
X

கோப்புப்படம்

பள்ளிபாளையம் பகுதியில் விசைத்தறி கூடங்கள் மூடப்பட்டதால், வருமானம் இன்றி வீட்டிலேயே முடங்கி கிடக்கும் தொழிலாளர்கள்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுகாவிற்குட்பட்ட பள்ளிபாளையம் பகுதிகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. விசைத்தறி தொழில் மூலம் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கூலித்தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் தொழில் புரிந்து வருகின்றனர். கொரோனா தொற்று பரவல் ஊரடங்கு காரணமாக அதிகாலை 4 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே வர்த்தக நிறுவனங்கள், கடைகள் இயங்க வேண்டும். விசைத்தறி தொழிலும் மூட வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் விசைத்தறி தொழிலாளர்கள் பலர் வேலை இழந்து வறுமையில் பரிதவித்து வருகின்றனர். மேலும் நூற்றுக்கணக்கான விசைத்தறி கூடங்களும் மூடப்பட்டு தொழிலாளர்களுக்கு இரண்டு வார கால விடுமுறை வழங்கி உத்தரவிட்டுள்ளதால் தொழிலாளர்கள் வருமானம் இன்றி வீட்டிலேயே முடங்கி கிடக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்தாண்டு ஊரடங்கில் விசைத்தறி கூடங்கள் இயங்காமல் பல மாதங்கள் மூடிக் கிடந்தது. கடந்த நான்கைந்து மாதமாக மீண்டும் விசைத்தறி தொழில்கள் சூடுபிடித்து வந்த நிலையில் தற்பொழுது கொரோனா தொற்று இரண்டாம் அலையால் விசைத்தறி கூடங்கள் முழுவதும் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

தமிழக அரசு வறுமையில் வாடும் விசைத்தறி தொழிலாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் ரேஷனில் இலவசமாக வழங்குவதுடன், அரசு போதிய நிவாரண தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
ai marketing future