கூலி உயர்வு பேச்சுவார்த்தை:முன்னாள் அமைச்சர் தங்கமணி எம்எல்ஏ பங்கேற்பு

குமாரபாளையம் எம்.எல்.ஏ. அலுவலகத்தில், தொழிலாளர்கள், ஜவுளி உற்பத்தியாளர்கள், அடப்பு தறி உரிமையாளர்களுடன் முன்னாள் அமைச்சர் தங்கமணி கூலி உயர்வு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்
குமாரபாளையம் விசைத்தறி தொழிலாளர்கள் கூலி உயர்வு பேச்சுவார்த்தையில் முன்னாள் அமைச்சர் தங்கமணி பங்கேற்றார்.
குமாரபாளையத்தில் விசைத்தறி தொழிலாளர்கள் 75 சதவீத கூலி உயர்வு வழங்க வலியுறுத்தி பிப். 1 முதல் காலவரையற்ற போராட்டம் நடத்தி வருகின்றனர். 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் முடங்கியுள்ளது.பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லை. ஜவுளி உற்பத்தியாளர்கள் பலர் ஊரில் இல்லை என்று காரணம் கூறி, பேச்சுவார்த்தை தள்ளிக்கொண்டே போனது.
பிப்.11ல் உடன்பாடு ஏற்படாததால், ஆத்திரமடைந்த விசைத்தறி தொழிலாளர்கள் தாலுக்கா அலுவலகம் முன்பு முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து, கூலி உயர்வு வழங்காத ஜவுளி உற்பத்தியாளர்கள், அடப்புத்தறி உரிமையாளர்களை கைது செய், என்று கண்டன கோஷமிட்டனர். நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் இருதரப்பினரிடம் பேசி, பிப். 13ல் இறுதி கட்ட பேச்சுவார்த்தைக்கான தேதி அறிவிக்கப்படும் என தொழிலாளர்கள் மத்தியில் உறுதி கூறினார். இதனால் அனைவரும் கலைந்து சென்றனர்.
இந்நிலையில் தொழிற்சங்க நிர்வாகிகள், ஜவுளி உற்பத்தியாளர்களிடம் விஜய்கண்ணன் கலந்து பேசி பிரச்னையை ஓரளவு தீர்வுக்கு கொண்டுவந்துள்ளார். விசைத்தறி தொழிலாளர் சங்கத்தினர், ஜவுளி உற்பத்தியாளர்கள், அடப்பு தறி உரிமையாளர்கள் ஆகியோருடன் இறுதி கட்ட கூலி உயர்வு பேச்சுவார்த்தை பிப். 17ல் நடைபெறும் என தாசில்தார் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் எம்.எல்.ஏ. அலுவலகத்தில், தொழிலாளர்கள், ஜவுளி உற்பத்தியாளர்கள், அடப்பு தறி உரிமையாளர்களுடன் முன்னாள் அமைச்சர் தங்கமணி கூலி உயர்வு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இது குறித்து இறுதிகட்ட பேச்சு வார்த்தை இன்று( பிப். 17ல்) தாலுகா அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu