அரசு கல்வியியல் கல்லூரி சார்பில் வாக்காளர் நாள் விழிப்புணர்வு பேரணி

அரசு கல்வியியல் கல்லூரி  சார்பில்  வாக்காளர் நாள் விழிப்புணர்வு பேரணி

 சிறப்பு அழைப்பாளராக நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் பங்கேற்று, கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்து பேசினார்.

குமாரபாளையத்தில் அரசு பி எட் கல்லூரி சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

குமாரபாளையத்தில் அரசு பி எட் கல்லூரி சார்பில்விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

தேசிய வாக்காளர் தினத்தையொட்டி குமாரபாளையம் அரசு பி எட் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. முதல்வர் ஜான் பீட்டர் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் பங்கேற்று, கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்து பேசினார்.

பின்னர் இவர் பேசியதாவது:: இந்திய அரசாங்கத்தால் இளம் வாக்காளர்களை ஊக்கப்படுத்துவதற்காக ஜனவரி 25-ஆம் தேதி தேசிய வாக்காளர் நாளாக (National Voters' Day) கடைபிடிக்கப்படுகிறது. வாக்களிப்பதை மக்கள் தங்கள் கடமையாகக் கருத வேண்டும் என்ற விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவது இந் நாளின் நோக்கமாகும்.

18 வயது நிரம்பிய இந்தியக் குடிமக்கள் அனைவரும் வாக்களிக்கத் தகுதி வாய்ந்தவர். தேர்தல் என்பது பொதுவாக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை வருகிறது. சாதி, மதம், இனம் என்ற வேறுபாடுகளைக் களைந்து 18 வயது நிரம்பிய இந்திய குடியுரிமை பெற்ற மக்கள் அனைவரும் வாக்களிக்கத் தகுதி உள்ளவர்கள். வாக்காளர் அனைவருக்கும் வாக்காளர் அடையாள அட்டை ஒன்று தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படுகின்றது.

1950ஆம் ஆண்டு சனவரி 25 அன்று இந்தியத் தேர்தல் ஆணையம் தோற்றுவிக்கப்பட்டதைக் கொண்டாடும் விதமாக 2011-இலிருந்து இது பின்பற்றப்படுகிறது.தேர்தல் ஆணையம் 1950 ஜன. 25ல் தொடங்கப்பட்டது. இது ஒரு தன்னாட்சி அதிகாரம் மிக்கது. இதன் 60வது ஆண்டு விழாவை சிறப்பிக்கும் விதமாக 2011 ஜன. 25ல் தேசிய வாக்காளர் தினம் தேர்தல் ஆணையத்தால் தொடங்கப்பட்டது. நாட்டில் ஊராட்சி தலைவர் முதல் பிரதமர் வரை மக்கள் ஓட்டளிப்பதன் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். 18 வயது பூர்த்தியானவர்கள் தவறாமல் ஓட்டளிப்பது ஜனநாயக கடமை. அதே போல 18 வயது நிரம்பியவர் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்த்து, அடையாள அட்டையும் பெற்றுக்கொள்ள வேண்டும்.

சுதந்திர இந்தியாவில் முதல் லோக்சபா தேர்தல் ஐந்து மாதங்கள் தொடர்ச்சியாக நடந்தன. 1951 முதல் 2014 வரை 16 முறை லோக்சபாவிற்கான தேர்தல் நடந்துள்ளது. உலகின் மிகப்பெரிய தேர்தலாக 81.45 கோடி வாக்காளர்களுடன் நடந்த 2014 லோக்சபா தேர்தலில் 66.38 சதவீதத்தினர் வாக்களித்துள்ளனர்.அனைவரும் வாக்களிக்க வேண்டும், அன்பளிப்புகளை எதிர்பார்த்து வாக்களிக்க கூடாது, சாதி, மத சார்புகளை கடந்து வாக்களிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

கல்லூரி வளாகத்தில் துவங்கிய பேரணி, நகரின் முக்கிய சாலைகள் வழியாக பள்ளிபாளையம் பிரிவு சாலை வரை சென்று, மீண்டும் கல்லூரி வளாகத்தில் நிறைவு பெற்றது. 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்று விழிப்புணர்வு கோஷங்கள் போட்டவாறும், பதாதைகள் ஏந்தியவாறும் பங்கேற்றனர்.

என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் மனோகரன், நிர்வாகிகள் செல்வராஜ், செந்தில்குமார், ஐயப்பன், சரவணன், கந்தசாமி, கதிரேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.





Tags

Next Story