ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
![ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்](https://www.nativenews.in/h-upload/2023/03/24/1686228-24nmksiv03.webp)
குமாரபாளையத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள்சங்கத்தினர் சார்பில் கோரிக்கைகள் வலியுறுத்தி தாலுக்கா அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடைபெற்றது.
ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் (ஜேக்டோ-ஜியோ) சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
குமாரபாளையத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் தாலுக்கா அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற வட்டார செயலர் இளையராஜா தலைமையில் நடைபெற்றது. பழைய ஓய்வூதிய திட்டம் அமல் படுத்த வேண்டும், மத்திய அரசு ஊழியர்க ளுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்,
முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு, உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை வழங்க வேண்டும், ஒன்றிய அரசுக்கு இணையான அகவிலைப்படி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகள் வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் நிர்வாகிகள் மாரிமுத்து, குமார், ஜெயபிரகாஷ், வெங்கடேசன், சரவணன், செல்லதுரை உள்பட பலர் பங்கேற்றனர்.
இது குறித்து நிர்வாகிகள் கூறியதாவது:பழைய ஒய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசுப் பணிகளில் காலி இடங்களை நிரப்புதல், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர், ஆசிரியர் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது.இதையொட்டி, அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் போராட்டம் நடைபெற்றது.
சட்டப்பேரவைத் தேர்தலின் போது திமுக பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியது. ஆனால், ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகளாகியும், ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளில் எதையும் நிறைவேற்றவில்லை. இது மிகவும் வேதனையளிக்கிறது.
ஆசிரியர்களின் உயர்கல்வி ஊக்க ஊதியம் கடந்த ஆட்சியில் நிறுத்தப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்தபிறகும், அதே நிலையே தொடர்கிறது. புதிய ஓய்வூதியத்தைக் கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்.இந்தக் கோரிக்கைகள் தொடர்பாக, ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்களை அழைத்துப் பேசி, அவற்றை நிறைவேற்ற தமிழக முதல்வர் முன்வர வேண்டும்.
மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை ஏற்காமல், தமிழகத்துக்கென பிரத்யேக கல்விக் கொள்கையை வடிவமைக்கும் பணியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. அதேநேரம், தேசிய கல்விக் கொள்கையில் உள்ள மாதிரிப் பள்ளி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள், மறைமுகமாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன.அனைவருக்கும் சமமான கல்வி வழங்க வேண்டும். இது தொடர்பாக தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu