குமாரபாளையத்தில் மது, புகையிலை பொருட்கள் விற்பனை: 3 பேர் கைது

குமாரபாளையத்தில் மது, புகையிலை பொருட்கள் விற்பனை: 3 பேர் கைது
குமாரபாளையத்தில் மது, புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் அரசு அனுமதியில்லாமல் மது விற்ற இருவர் கைது செய்யப்பட்டனர்.

குமாரபாளையம் பகுதியில் அரசு அனுமதி இல்லாமல் மது விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதில் சின்னப்பநாயக்கன்பாளையம், ராஜராஜன் நகர் பகுதியில் மது விற்பதாக தகவலறிந்து நேரில் சென்று அங்கு மது விற்றுக்கொண்டிருந்த கணேசன், 40, செல்வம், 41, ஆகிய இருவரையும் கைது செய்தனர். இவர்களிடமிருந்து தலா 15 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

புகையிலை பொருட்கள் விற்பனை: ஒருவர் கைது

குமாரபாளையம் அருகே அம்மன் நகர் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், எஸ்.ஐ. தங்கவடிவேல் உள்பட போலீசார் பலர் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள ஒரு மளிகை கடையில் புகையிலைப் பொருட்கள் விற்பது கண்டுபிடிக்கப்பட்டது. விற்பனை செய்த பழனிச்சாமி, 54, என்பவரை கைது செய்து, அவரிடமிருந்த புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story