கூலி உயர்வு பேச்சுவார்த்தை தோல்வி: நாளை தீர்வு காண நகராட்சி சேர்மன் உறுதி

கூலி உயர்வு பேச்சுவார்த்தை தோல்வி:  நாளை தீர்வு காண  நகராட்சி சேர்மன் உறுதி
X

குமாரபாளையம் தாலுக்கா அலுவலகத்தில் நடைபெற்ற விசைத்தறி தொழிலாளர்களின் கூலி உயர்வு பேச்சுவார்த்தையில் சேர்மன் விஜய்கண்ணன் பேசினார்.

குமாரபாளையத்தில் விசைத்தறி தொழிலாளர்கள் கூலி உயர்வு பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததையொட்டி நாளை இறுதி கட்ட பேச்சுவார்த்தை

குமாரபாளையத்தில் விசைத்தறி தொழிலாளர்கள் கூலி உயர்வு பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததையொட்டி நாளை இறுதி கட்ட பேச்சு வார்த்தைக்கான தேதி அறிவிக்கப்படும் என நகராட்சி சேர்மன் அறிவித்தார்.

இது பற்றி விசைத்தறி தொழிற்சங்க நிர்வாகி சுப்ரமணி கூறியதாவது:குமாரபாளையத்தில் விசைத்தறி தொழிலாளர்கள் 75 சதவீத கூலி உயர்வு வழங்க வலியுறுத்தி பிப். 1 முதல் காலவரையற்ற போராட்டம் நடத்தி வருகின்றனர். 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் முடங்கியுள்ளது. விசைத்தறி தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மூன்று நாட்கள் முன்பு பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் கூலி உயர்வு கேட்டு விசைத்தறி தொழிலாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தாசில்தார் சண்முகவேல் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை இரண்டு கட்டங்களாக நடைபெற்றும் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் பிப். 11ல் பேச்சுவார்த்தை நடைபெறும் என கூறி, கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

காலையில் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் அடப்பு தறி உரிமையாளர்களுடன் தாசில்தார் சண்முகவேல் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. மாலையில் அடப்புத்தறி உரிமையாளர்கள், தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தை நடைபெற்றது. ஜவுளி உற்பத்தியாளர்கள் பலர் வெளியூர் சென்றுள்ளனர். அவர்கள் வந்த பின் மற்றொரு பேச் சுவார்த்தை நடத்தலாம் என்றனர். தொழிலாளர்கள் இதற்கு உடன்பட மாட்டார்கள் என்றோம்.

நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் கூட்டத்தில் பங்கேற்று, மாவட்ட கலெக்டரிடம் தகவல் தெரிவித்து, அனைத்து ஜவுளி உற்பத்தியாளர்களை வரவழைத்து பேசி தீர்வு காணலாம். அந்த இறுதி கட்ட பேச்சுவார்த்தைக்கான தேதி பிப்.12-ல் அறிவிக்கப்படும் என்று உறுதி கூறியுள்ளார். கூட்டம் முடிந்து வெளியில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மத்தியில் இதற்கான உத்தரவாதத்தை விஜய்கண்ணன் கொடுத்துள்ளார் என்று அவர் கூறினார்.

பேச்சுவார்த்தை நடக்கும் போது, உடன்பாடு ஏற்படவில்லை என அறிந்த தொழிலாளர்கள் தாலுக்கா அலுவலகம் முன்பு முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து, கூலி உயர்வு வழங்காத ஜவுளி உற்பத்தியாளர்கள், அடப்புத்தறி உரிமையாளர்களை கைது செய், என்று கண்டன கோஷமிட்டனர். பேச்சு வார்த்தையில் தாசில்தார் தங்கம், காவல் ஆய்வாளர் ரவி, திமுக நகர செயலர் செல்வம், அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள், சிறு, குறு ஜவுளி உற்பத்தியாளர் சங்க நிர்வாகி பிரபாகரன் உள்பட பலர் பங்கேற்றனர்.



Tags

Next Story
ai in future agriculture