இருப்பிடம் அருகாமையில் ஓய்வூதியம் வழங்கலாமே: அரசுக்கு பயனாளிகள் கோரிக்கை

இருப்பிடம் அருகாமையில் ஓய்வூதியம் வழங்கலாமே: அரசுக்கு பயனாளிகள் கோரிக்கை
ஊரடங்கு காலத்தில், மாதாந்திர ஓய்வூதியத்தொகையை பயனாளிகள் அதிகம் இருக்கும் பகுதிகளுக்கு வந்து வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழக அரசு முழு ஊரடங்கை அறிவித்துள்ளது. எனவே, அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வெளியே வர வேண்டும்; குறிப்பாக பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என மருத்துவத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில், மாதாந்திர ஓய்வூதியத்தொகை பெறுவதற்கு, ஏராளமான முதியவர்கள் வங்கி கிளை முன் கூட்டமாக குவிந்தனர். இதனால், சமூக இடைவெளி என்பது கேள்விக்குறியாகிறது. தொற்று பரவலுக்கு இது வழிவகுக்கிறது.

இதுகுறித்து முதியோர் உதவித்தொகை பெறும் பயனாளிகள், இன்ஸ்டாநியூஸ் செய்தி தளத்திடம் கூறியதாவது: தொற்று பரவும் அபாயம் இருந்தாலும் வயதானவர்கள் வெளியே வரக்கூடாது என அரசு சொன்னாலும் ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பொருள் கூட வாங்க முடியாத சூழல் நிலவுகிறது. எனவே, இந்த உதவித்தொகை ஓரளவுக்கு குடும்ப சுமையை குறைக்க உதவும் என்பதால் வங்கி கிளைக்கு வந்திருக்கிறோம்.

ஊரடங்கு காலம் முடியும் வரை ஓய்வூதிய பயனாளிகள் இருக்கும் வீட்டுக்கு அருகில், கடந்த காலங்களில் கொடுத்தது போல மாதாந்திர உதவித்தொகை வழங்கினால் உதவிகரமாக இருக்கும். எனவே தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் வீடுதோறும் ஓய்வூதிய பணத்தை வழங்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

Tags

Next Story