அரசு மகளிர் பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கிய நகராட்சி சேர்மன்

குமாரபாளையம் அரசு மகளிர் பள்ளியில் இலவச சைக்கிள்களை நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் வழங்கினார்.
தமிழக அரசு சார்பில் அரசு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா தலைமை ஆசிரியை (பொ) தமிழி தலைமையில் நடந்தது. நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் பங்கேற்று, 163 இலவச சைக்கிள்களை வழங்கி வாழ்த்தினார்.
இதில் விஜய்கண்ணன் பேசியதாவது:
மாணவ, மாணவியர் சிரமம் இல்லாமல் பள்ளிக்கு வர வேண்டிதான் இந்த இலவச சைக்கிள்கள் வழங்கப்படுகிறது. இதற்கு நாம் அரசுக்கு திரும்ப செய்யும் கைம்மாறு என்பது, அதிக மதிப்பெண்கள் பெற்று, பெற்றோர்களை, ஆசிரிய பெருமக்களை, தமிழக அரசை மகிழ்வித்து உயர்கல்வி பயில வேண்டும் என்பதுதான். மாதா, பிதா, குரு, தெய்வம் என்பார்கள். தெய்வம் கூட கடைசிதான். பெற்றோருக்கு அடுத்து ஆசிரிய பெருமக்கள்தான் உள்ளனர். அவர்கள் சொல் கேட்டு, வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் கவுன்சிலர்கள் ஜேம்ஸ், கனகலட்சுமி, நிர்வாகிகள் செல்வராஜ், செந்தில், உள்பட பலர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu