குமாரபாளையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றிய நெடுஞ்சாலைத்துறையினர்

குமாரபாளையத்தில் நெடுஞ்சாலைத்துறையினர் ஆக்கிரமிப்புகள் அகற்றினர்
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் சேலம் சாலையில் கத்தேரி பிரிவு முதல் பழைய காவேரி பாலம் வரை சாலையின் இருபுறமும் வியாபாரிகள் பாதையை ஆக்கிரமிப்பு செய்து, போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தி வந்தனர்.
இது குறித்து பல தரப்பினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் நெடுச்சாலைத்துறையினர் நேற்று ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர். சரவணா தியேட்டர் எதிரில் பழைய இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யும் நபர்கள், நடைமேடை முழுதும் ஆக்கிரமிப்பு செய்து வாகனங்களை நிறுத்தி வைத்திருந்தனர். அவைகளை எடுக்க சொல்லி அறிவுரித்தினர். மேலும் ஸ்டேட் வங்கி எதிரில் சாலையோர துணிக்கடைகள் இருப்பதால், பஸ், லாரி உள்ளிட்ட கன ரக வாகனங்கள் வரும்போது, டூவீலர்கள், நடந்து செல்வோர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு பலரும் பாதிப்புக்கு ஆளாகி வருகிறார்கள்.
இந்த துணிக்கடையினரிடம் நெடுஞ்சாலைத்துறையினர் ஆக்கிரமிப்பு அகற்ற சொல்லி சொன்ன போது, நகராட்சி சார்பில் எங்களிடம் வரி வசூல் செய்கிறார்கள், கடைகளை அகற்ற மாட்டோம் என ரசீதுகளை எடுத்துக் காட்டினர். இதனால் செய்வதறியாது நெடுஞ்சாலைத்துறையினர் திகைத்தனர்.
பொதுமக்கள் கூறுகையில், சாலையினை ஆக்கிரமிப்பு செய்து துணிக்கடைகளை வைத்துள்ளனர். இது தவறு என சுட்டிக்காட்டி அகற்ற வேண்டிய நகராட்சி நிர்வாகத்தினர் வரி வசூல் செய்வதை காரணமாக காட்டி, கடைகளை அகற்ற மறுக்கின்றனர். மிக குறுகலான சாலையில் இந்த கடைகள் இருப்பதால் போக்குவரத்து பாதிப்பு, விபத்து அபாயம் ஏற்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
சாலைகளில் வைக்கப்பட்ட ஸ்டாண்டிங் விளம்பர போர்டுகள், பிளெக்ஸ் போர்டுகள் உள்ளிட்டவைகள் அகற்றப்பட்டன. இதில் நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu