மரண பயத்துடன் புறவழிச்சாலையை கடக்கும் பொதுமக்கள், மாணவர்கள்

மரண பயத்துடன் புறவழிச்சாலையை கடக்கும் பொதுமக்கள், மாணவர்கள்
X

குமாரபாளையம் கத்தேரி புறவழிச்சாலை பஸ் நிறுத்த பகுதியில் போலீசார் இல்லாததால், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாகனங்கள் தாறுமாறாக சாலையை கடந்து செல்கின்றன. 

குமாரபாளையத்தில் பொதுமக்கள், மாணவ, மாணவியர் மரண பயத்துடன் புறவழிச்சாலையை கடந்து வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே சேலம் கோவை புறவழிச்சாலை கோட்டைமேடு பகுதியில் மேம்பாலம் இல்லாததால், அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டன. பொதுமக்கள் போராட்டத்தையடுத்து அங்கு மேம்பாலம் கட்டப்பட்டது.

அதே போல் அதிக மக்கள் சாலையை கடக்கும் பகுதியாக கத்தேரி பிரிவு பஸ் நிறுத்தம் பகுதி மாறியுள்ளது. தட்டான்குட்டை, வேமன்காட்டுவலசு, சத்யா நகர், ஜெய்ஹிந்த் நகர், உள்ளிட்ட பல பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இந்த சாலை வழியாகத்தான், கடந்து செல்லும் நிலை உள்ளது.

மேலும் இந்த பகுதியில் அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள், தனியார் நிறைய உள்ளதால், இவைகளில் சேர மாணவ, மாணவியர் இந்த சாலையை கடந்து செல்லும் அத்தியாவசியம் ஏற்பட்டு வருகிறது. குமாரபாளையம் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் இந்த சாலையை கடந்து செல்கின்றனர்.

கோடை விடுமுறை என்பதால், இந்த சாலை வழியாக அதிக வாகனங்கள் சென்று கொண்டுள்ளன. ஒருமுறை பொதுமக்கள் சாலையை கடக்க காத்திருந்தால் பாதி தூரம் கடக்க சுமார் 15 நிமிடமும், பாதி தூரத்தில் இருந்து மறுபக்கம் செல்வதானால் மேலும் 10 அல்லது 15 நிமிடங்கள் ஆகின்றது. இதனால் கால விரயம், எரிபொருள் விரயம் ஏற்படுகிறது. இந்த இடத்தில் போக்குவரத்து போலீசார் கடந்த பல நாட்களாக ஒருவர் கூட நிற்பது இல்லை.

ஆனால் கோட்டைமேடு மேம்பாலம் அருகில், இதே சாலையில்தான் நெடுஞ்சாலை போக்குவரத்து போலீசார் அலுவலகம் உள்ளது. போக்குவரத்து போலீசார் இருந்தால், வாகனங்களை கட்டுபடுத்தி, சாலையை கடக்கும் பொதுமக்களுக்கு உதவியாக இருக்கும். இது குறித்து யாரும் எவ்வித நடவடிக்கையும் எடுப்பது இல்லை. குமாரபாளையம் போலீசாரும் இங்கு பாதுகாப்பு பணியில் நிற்பது இல்லை. கேட்டால், நாமக்கல் பகுதியில் பாதுகாப்பு பணிக்கு சென்று விட்டனர் என கூறி வருகின்றனர்.

குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷன், போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன்களில் போதிய போலீசார் நியமித்து, பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், இந்த இடத்தின் அத்தியாவசியம் கருதி உடனே மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
ai in future agriculture