நடுத்தர மக்களின் டூவீலர் ஆசையை நிறைவேற்றும் ஆட்டோ கன்சல்டிங் நிறுவனங்கள்

நடுத்தர மக்களின் டூவீலர் ஆசையை நிறைவேற்றும் ஆட்டோ கன்சல்டிங் நிறுவனங்கள்

குமாரபாளையம் சேலம் சாலையில் ஆட்டோ கன்சல்டிங் நிறுவனங்கள் முன்பு அதிக அளவில் நிறுத்தி வைக்கபட்டிருக்கும் பழைய டூவீலர்கள்

குமாரபாளையம் நகரில் நடுத்தர மக்களின் டூவீலர் வாங்கும் ஆசையை நிறைவேற்றும் வகையில் ஆட்டோ கன்சல்டிங் நிறுவனங்கள் அமைந்துள்ளன.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நகரில் விசைத்தறி மற்றும் கைத்தறி ஜவுளி உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளன. இதற்கு அடுத்தப்படி என்று சொல்லுமளவிற்கு ஆட்டோகன்சல்டிங் தொழில் விஸ்வரூப வளர்ச்சி பெற்றுள்ளது என்றால் அது மிகையல்ல.

நாளுக்கு நாள் செய்தி தாள்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் பல்வேறு டூவீலர் நிறுவனங்கள் தங்கள் உற்பத்தி வாகனங்கள் குறித்து விளம்பரம் செய்து வருகின்றன. அன்றாடம் வாழ்க்கை தேவையை நிறைவேற்றுவதே மிகவும் சிரமப்பட்டு வரும் நிலையில், ஒரு லட்சம் மேல் செலவு செய்து புதிய இரு சக்கர வாகனம் வாங்குவது என்பது கனவிலும் இயலாத காரியம். இது போன்ற நடுத்தர மக்களின் டூவீலரின் தேவையை நிறைவேற்றும் விதமாக 30 ஆயிரத்தில் இருந்து, 50 ஆயிரத்திற்குள் டூவீலர் கிடைத்து வருவது வரப்பிரசாதமாக உள்ளது. இதனால் ஷோரூம்களை தேடிச்செல்லும் வசதியானவர்கள் மத்தியில், தங்கள் நிலைக்கு தக்கவாறு டூவீலர் வழங்கும் ஆட்டோ கன்சல்டிங் நிறுவனங்களை நாடி பொதுமக்கள் அதிக அளவில் செல்ல துவங்கினர்.

தொழில் வளம் அதிகம் உள்ளதால் விசைத்தறி, கைத்தறி மற்றும் சாயப்பட்டறை தொழிலாளர்கள் வாங்கி வருகின்றனர். குமாரபாளையம் பகுதியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அதிக அளவில் உள்ளதால், பல்வேறு மாநிலங்கள் மற்றும் பல்வேறு வெளிநாடுகளில் இருந்து மாணவ, மாணவியர்கள் விடுதிகளில் தங்கி கல்வி பயின்று வருகிறார்கள். நகரிலிருந்து பல கி.மீ. தூரம் சென்று கல்வி நிறுவனங்களுக்கு செல்ல வேண்டிய நிலையில் உள்ளதால் இது போன்ற மாணவ, மாணவியர்களும் இது போன்ற ஆட்டோ கன்சல்டிங்க்கில் டூவீலர் வாங்கி வருகின்றனர்.

இதுகுறித்து ஆட்டோகன்சல்டிங் உரிமையாளர் ரவிச்சந்திரன் கூறுகையில், டூவீலர் வாங்கும் நபர்களுக்கு புதிய வாகனங்கள் போல் தவணை முறையிலும் விற்பனை செய்வதால் எளிதில் அவர்களால் தொகை செலுத்த முடிகிறது. குமாரபாளையம் நகரை சுற்றி தற்போது சுற்றுப்புற பகுதிகளில் அதிக அளவிலான வீடுகள் கட்டப்பட்டதால், விரிவுபடுத்தப்பட்ட பகுதியாக மாறியுள்ளது. இதனால் டூவீலர் இல்லாமல் சாதாரணமாக வீட்டுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டதாலும், ஆட்டோவில் சென்றால் அதிக செலவாகும் என்பதால் டூவீலரில் தங்கள் குடும்பத்தினரை ஏற்றிக்கொண்டு விசேஷ நிகழ்ச்சிகளுக்கும், சினிமா உள்பட பல கேளிக்கை நிகழ்சிகளுக்கும் சென்று வர டூவீலர்தான் உதவியாக இருந்து வருகிறது. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களே இருப்பதால், மேலும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் உள்ளனர்.

ஒரே குடும்பத்தில் கணவன், மனைவி வேலைக்கு செல்வதாக இருப்பதாலும், வளர்ந்த நிலையில் உள்ள தங்கள் மகன் மற்றும் மகளுக்கு கூட டூவீலர் தேவை இருப்பதால் ஒரு குடும்பத்திற்கு 2 அல்லது 3 டூவீலர்கள் வாங்கும் நிலை ஏற்படுகிறது. வாகன தேவை அதிகரிப்பதால் புதிய வாகனங்கள் வாங்கினால் தொகை அதிகம் செலவாவதால், இங்கு வந்து குறைந்த பட்ஜெட்டில் டூவீலர் வாங்கி செல்கிறார்கள். இதனால் அதிக அளவிலான கன்சல்டிங் நிறுவனங்கள் உருவாகியுள்ளது. நேர்மையான முறையில், நியாயமான முறையில் குமாரபாளையம் நகரில் டூவீலர்கள் விற்கப்படுவதால், அதிக அளவிலான வாடிக்கையாளர்கள் வருகிறார்கள். எங்களிடம் வாங்குவோர் அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு சிபாரிசு செய்வதால் அவர்களும் வருகிறார்கள். எங்களிடம் டூவீலர் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் தலைக்கவசம் இலவசமாக வழங்கி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story