முதலீட்டு தொகை திரும்பப் பெற கெடு விதிப்பு

முதலீட்டு தொகை திரும்பப் பெற கெடு விதிப்பு
X
ராசிபுரம் மோசடி வழக்கில் முதலீட்டாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு

முதலீட்டு தொகை திரும்ப கிடைக்க ஆவணங்களை ஒப்படைக்க கெடு விதிப்பு

ராசிபுரம் வி.பி.பி. நகர் ரியல் எஸ்டேட் நிறுவன வழக்கில் முதலீட்டு தொகையை திரும்ப பெற புகார்தாரர்கள் அசல் ஆவணங்களை ஒப்படைக்க வேண்டும் என நாமக்கல் பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி. ரங்கசாமி அழைப்பு விடுத்துள்ளார். அவரது செய்திக்குறிப்பின்படி, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் கச்சேரி தெருவில் இயங்கி வந்த வி.பி.பி. நகர் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் உரிமையாளர் பச்சிராஜா தவணை முறையில் காலி வீட்டுமனை பெற கவர்ச்சி திட்டங்களை அறிவித்து பொதுமக்களிடமிருந்து பணத்தை வசூலித்துள்ளார். ஆனால் திட்டகாலம் முடிந்த பின்னும் முதலீட்டுதாரர்களுக்கு மனைகளை பிரித்து வழங்கவோ முதலீட்டு பணத்தை திருப்பி தரவோ இல்லை. இதையடுத்து முதலீட்டாளர்கள் அளித்த புகார்படி பச்சிராஜா மற்றும் சிலர் மீது வழக்கு பதியப்பட்டது. 2018ல் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அக்பர் அலி தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்புக்குழுவின் விசாரணைக்குப் பின், புகாரளித்தவர்கள் முதலீட்டு தொகையை திரும்ப பெற அசல் ஒப்பந்த பத்திரம், மாத தவணை கட்டிய அசல் ரசீதுகளை ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது. மேலும், அசல் ஆவணங்களை ஒப்படைக்காத புகார் மனுக்களை தகுதியற்ற புகார்தாரர்களாக அறிவிக்கவும் உத்தரவிடப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியான 21 நாட்களுக்குள் அசல் கிரய ஒப்பந்த பத்திரம், மாத தவணை ரசீதுகளை ஒப்படைக்காத புகார்தாரர்கள் அனைத்து அசல் ஆவணங்களையும் நாமக்கல் பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி.யிடம் ஒப்படைத்து முதலீட்டு தொகையை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story