நெல்லை இளைஞர் வெட்டிக்கொலை! மதுரையில் நடந்த சம்பவம்..!

நெல்லை இளைஞர் வெட்டிக்கொலை! மதுரையில் நடந்த சம்பவம்..!
திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த ரௌடி, மதுரையில் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுக்கா, ஆஸ்டியன்பட்டி அருகிலுள்ள கருவேலம்பட்டி ரயில்வே கேட் பக்கத்தில் ஆண் சடலம் ஒன்று நேற்று கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பகுதி மக்கள் சிலர் உடனடியாக இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இது பற்றி தகவல் அறிந்த ஆஸ்டியன்பட்டி போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு சடலமாக கிடந்த இளைஞரின் உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர் மேற்கொண்டு விசாரணையையும் தொடங்கினர். சடலமாக கிடந்த இளைஞர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என சந்தேகித்த காவல் அதிகாரிகள், அவரது உடலை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் காவல்துறை பதிவேட்டு தகவல்களின் அடிப்படையில், போலீஸாரின் விசாரணையில், அவர் நெல்லை மாவட்டம், பாளையசெட்டிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

பாளையசெட்டிகுளம் பகுதியில் வசித்து வரும் பால்ராஜ் என்பவரின் மகன் கிருஷ்ணகுமார் ( 30) தான் அந்த கொலை செய்யப்பட்டு கிடந்த இளைஞர் என்பது தெரிய வந்தது. அவர் மீது ஏற்கனவே கொலை உள்ளிட்ட சில வழக்கு நிலுவையில் இருக்கிறது என காவல்துறையினர் தெரிவித்தனர்.

அவர் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் போலீஸார் சந்தேகிக்கின்றனர். எஸ்.பி .சிவபிரசாத் உத்தரவின்பேரில், தனிப்படை போலீஸார் கொலையாளிகளைத் தேடி வருகின்றனர்.

Tags

Next Story