மதுரை மாட்டுத்தாவணி பஸ்நிலைய கழிப்பறைகளில் கூடுதல் கட்டணம்: மாநகராட்சி எச்சரிக்கை

மதுரை மாட்டுத்தாவணி பஸ்நிலைய   கழிப்பறைகளில் கூடுதல் கட்டணம்: மாநகராட்சி எச்சரிக்கை

மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையம் (கோப்பு படம்).

மதுரை மாட்டுத்தாவணி பஸ்நிலைய கழிப்பறைகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மதுரை மாநகராட்சி பொது கழிப்பறைகளில், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

மதுரை மாநகராட்சி மண்டலம் 2 வார்டு எண்.32 மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள பொது கழிப்பறைகளை, பொதுமக்கள் மற்றும் வெளியூர் பயணிகள் பயன்படுத்தி வருகிறார்கள். இதற்கு மாநகராட்சியால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணமாக சீறுநீர் கழிப்பதற்கு ரூ.2, மலம் கழிப்பதற்கு ரூ.5, குளிப்பதற்கு ரூ.10 என தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலம் இயக்குதல் மற்றும் பராமரித்தல் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேற்கண்ட பொது கழிப்பறைகளில் மாநகராட்சி நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக வசூலிப்பதாக பொது மக்களிடமிருந்து தொடர்ச்சியாக புகார்கள் வரப்பெற்றது.

அதன் அடிப்படையில், காலை 7 மணியளவில் மாநகர்நல அலுவலர்,ஒரு பொது பயனாளியாக கழிப்பறைக்கு சென்று பயன்படுத்த கேட்டபோது, கழிப்பறை கட்டணம் வசூலிப்பவர் சிறுநீர் கழிப்பதற்கு நிர்ணயம் செய்த கட்டணத்தை விட கூடுதலாக தொகை ரூ.10 தருமாறு கோரினார். இச்செயல் குறித்து, உடனடியாக மாட்டுத்தாவணி எம்.ஜி..ஆர்.பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள புறக்காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மற்றும் பணியாளர் மீது புகார் தெரிவித்து காவல்துறை மூலம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் இது போன்ற செயல்களில் ஈடுபடும் ஒப்பந்த நிறுவனத்தின் மீது மதுரை மாநகராட்சி நிர்வாகத்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

மதுரை மாநகராட்சி பொது கழிப்பறைகளில், மாநகராட்சி நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கப்பட்டால் பொதுமக்கள் உடனடியாக மதுரை மாநகராட்சி புகார் மையம் எண்.78716 61787 என்ற எண்ணிற்கு தொலை பேசி (அல்லது) வாட்ஸ்அப் வாயிலாக புகார் தெரிவிக்கலாம் என, மதுரை மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story