திருமங்கலம் அருகே கண்மாய் மடையில் பழங்கால கல்வெட்டு கண்டுபிடிப்பு
![திருமங்கலம் அருகே கண்மாய் மடையில் பழங்கால கல்வெட்டு கண்டுபிடிப்பு திருமங்கலம் அருகே கண்மாய் மடையில் பழங்கால கல்வெட்டு கண்டுபிடிப்பு](https://www.nativenews.in/h-upload/2021/08/19/1251353-img-20210819-wa0003.webp)
திருமங்கலம் தாலுகா, தே.கல்லுப்பட்டி அருகே வில்லூர் பெரிய கண்மாய் மடையில் கண்டறியப்பட்ட கல்வெட்டு
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள தே.கல்லுப்பட்டி வில்லூர் பெரிய கண்மாய் மடையில் கி.பி.9 ,13, மற்றும் 16ம் நூற்றாண்டை சேர்ந்த வெவ்வேறு காலக்கட்டத்தை கொண்ட துண்டு கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் , திருமங்கலம் அருகே உள்ள தே.கல்லுப்பட்டியில் இருந்து கள்ளிக்குடி செல்லும் வழியில் உள்ள வில்லூரில், மதுரை பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் ஆய்வாளர் முனைவர் து. முனீஸ்வரன் தலைமையில் பேராசிரியர் லெட்சுமண மூர்த்தி, அஸ்வத்தாமன், நாகபாண்டி, பழனிமுருகன் ஆகியோர் கொண்ட குழுவினர் அப்பகுதி மேற்பரப்பில் கள ஆய்வு செய்தபோது, பெரிய கண்மாய் மடை பகுதியில் வெவ்வேறு காலக்கட்டத்தை சேர்ந்த துண்டு கல்வெட்டு இருப்பது கண்டறியப்பட்டது.
விவசாயத்தில் செழிப்பான பகுதியாக விளங்கிய இவ்வூரின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள பெரிய கண்மாயில் நீர் வெளியேற மூன்று கண் மடை அமைந்துள்ளது. இதில் முதல் கண்ணின் சுவர் பக்கவாட்டியில் 1 அடி நீளம் ½ அடி அகலம் கொண்ட ஒரு கல்லில் 6 வரிகள் கொண்ட கி.பி. 9 ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டும், இரண்டாவது கண்ணில் சுவரின் உட்புறமாக சொருகப்பட்ட நிலையில் 3 வரி கொண்ட கி.பி. 13 ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டும் உள்ளன.இக்கல்வெட்டு நீர் வழிந்தோடும் இடத்தில் இருப்பதால் பல சொற்கள் அழிந்த நிலையில் உள்ளதால் சொற்களின் பொருள் அறிய முடியவில்லை.
கி.பி. 16 ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு செய்தி :
பெரிய கண்மாய் மூன்றாவது கண் மடையில் வலது புற சுவரின் 1 அடி அகலம், 3 அடி நீளம் கொண்ட ஒரே கல்லில் 11 வரிகள் கொண்ட கி.பி. 16 ம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கல்வெட்டில் சகல குரு நாயனே, சகல குரு பாதமே, சகல விஷமும் தீரும் எங்கே விஷந்தீண்டினாலும் நன் என்ற வரி பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டினை, படியெடுத்து தமிழக தொல்லியல் துறையில் இருந்து ஒய்வு பெற்ற முனைவர் சொ.சாந்தலிங்கம் உதவியுடன் ஆய்வு செய்தபோது, எங்கே விஷம் தீண்டினாலும் குருவோடு குருவின் பாதம் பணிந்தால் விஷத்தன்மை முற்றிலும் நீங்கி விடும். இக்கல்வெட்டினை வேறு பகுதியில் இருந்து எடுத்து வந்து பெரிய கண்மாய் கண் மடை கட்டப்பட்டுள்ளது என, குறிப்பிடப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu