மதுரை மாவட்டத்தில் ஆதிதிராவிட, பழங்குடியின மக்களுக்கு மின் இணைப்பு: ஆட்சியர் தகவல்

மதுரை மாவட்டத்தில் ஆதிதிராவிட, பழங்குடியின மக்களுக்கு மின் இணைப்பு:  ஆட்சியர் தகவல்
X
துரித மின் இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் மதுரை மாவட்டத்தில் 1000 பேருக்கு மானியத்தில் இணைப்பு வழங்கப்படவுள்ளது

மதுரை மாவட்டத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்த விவசாயிகளுக்கு துரித மின் இணைப்பு வழங்க விவசாயிகளிடமிருந்து புதியதாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) நிறுவனமானது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்த விவசாயிகளுக்கு துரித மின் இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் மின் மோட்டார் குதிரைத் திறனுக்கு ஏற்ப 90 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.3.60 இலட்சம் மானியத்தில் ஆதிதிராவிடர்களுக்கு 900 எண்ணிக்கையும் பழங்குடியினருக்கு 100 எண்ணிக்கையில் மொத்தம் 1000 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்குவதற்கு தாட்கோவின் இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்த விவசாயிகளாகவும் விவசாய நிலம் மற்றும் நிலப்பட்டா அவர்களின் பெயரில் இருப்பவர்கள் மட்டும் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.

மேலும், நிலத்தில் கிணறு அல்லது ஆழ்குழாய்கிணறு அமைக்கப்பட்டிருக்க வேண்டும். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் மின் இணைப்பு கோரி விண்ணப்பத்திருக்க வேண்டும்.

துரித மின் இணைப்புத் திட்டத்தில் தாட்கோ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு, மாவட்ட மேலாளரால் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கு 5 (குதிரைத்திறன்) மின் இணைப்புக் கட்டணம் ரூ.2.50 இலட்சத்திற்கான 10 சதவீத பயனாளி பங்குத் தொகை ரூ.25000மும் (குதிரைத்திறன்) மின் இணைப்புக் கட்டணம் ரூ.2.75 இலட்சத்திற்கான 10 சதவீத பயனாளி பங்குத் தொகை ரூ.27500மும், 10 (குதிரைத்திறன்) மின் இணைப்புக் கட்டணம் ரூ.3.00 இலட்சத்திற்கான 10 சதவீத பயனாளி பங்குத்தொகை ரூ.30000மும்,15 (குதிரைத்திறன்) மின் இணைப்புக் கட்டணம் ரூ.4.00 இலட்சத்திற்கான 10 சதவீத பங்குத் தொகை ரூ.40000கான, வங்கி வரைவோலை அளிப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

தகுதியில்லாத விண்ணப்பதாரர்கள் பங்குத்தொகை 10 சதவீதம் திருப்பி அளிக்கப்படும். கடந்த 2017 முதல் 2022 ஆண்டுகளில் மின் இணைப்பு வேண்டி மாவட்ட மேலாளரால் பரிந்துரைக்கப்பட்ட விவசாயிகளும் தற்போது, மேம்படுத்தப்பட்ட தாட்கோ இணையதளத்தில் 10 சதவீத பயனாளி பங்குத் தொகையுடன் புதியதாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ஏற்கெனவே, மின் இணைப்பு கோரி காத்திருப்பவர்களுக்கு மின் இணைப்பு வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படும். இத்திட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் இணையதள முகவரியில் நிலத்தின் சிட்டா, அடங்கல் நகல், "அ" பதிவேடு நகல், கிணறு அல்லது ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்ட நிலத்தின் வரைப்படம், சர்வே எண், மின் வாரியத்தில் பதிவு செய்த ரசீது நகல், மற்றும் புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பத்தினை பதிவு செய்ய வேண்டும்.

மேலும், கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட மேலாளர் அலுவலகம், தாட்கோ அறை எண். 106 முதல் தளம் பழைய இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், மதுரை- 625020 - என்ற முகவரியிலும், 0452-2529848 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் அதிக அளவில் பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் தகவல் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story