விபத்து இல்லாமல் தீபாவளியை கொண்டாடலாம்: மதுரை மாவட்ட எஸ்.பி. வேண்டுகோள்

விபத்து இல்லாமல் தீபாவளியை கொண்டாடலாம்:  மதுரை மாவட்ட எஸ்.பி. வேண்டுகோள்

மதுரை மாவட்ட போலீஸ் எஸ்.பி. வீ. பாஸ்கரன்.

விலங்குகளை துன்புறுத்தும் வகையிலும், அவை பயப்படும் வகையிலும் பட்டாசு வெடிக்கக்கூடாது

தீ விபத்து இல்லாமல் தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாட வேண்டும்மென மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாடு முழுவதும், வரும் நவம்பர் 04-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இந்த தீபாவளியை விபத்து இல்லாமல் பாதுகாப்பாக கொண்டாடும் வேண்டுமென அறிவுறுத்தி மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ. பாஸ்கரன் வெளியிட்ட அறிக்கை: சுற்றுச் சூழல் மாசடைவதைத் தடுக்கும் பொருட்டு, பட்டாசு வெடிக்க இரண்டு மணி நேரம் மட்டுமே உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அதன் படி ,தமிழக அரசு உத்தரவுப்படி காலை 6 மணி முதல் 7 மணி வரை 1 மணி நேரமும், மாலை 7 மணி முதல் 8 மணி வரை 1 மணி நேரமும் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கியுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவை கடைபிடித்து சுற்றுச் சுழல் கெடாத வகையில், தீபாவளியைக் கொண்டாட வேண்டும். சரவெடி பட்டாசுகளை வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

பேரியம் சல்பேட் கொண்டு தயாரிக்கப்பட்ட வெடி பொருட்களை தவிர்க்க வேண்டும், தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிக்கும் போது, அருகில் எளிதில் தீப்பற்றும் பொருட்கள் இருப்பின் மிகுந்த கவனமாக பட்டாசு வெடிக்க வேண்டும். குடிசைப் பகுதிகளில் வெடி வெடிக்கக் கூடாது. பட்டாசு வெடிக்கும்போது, தளர்வான ஆடைகள் உடுத்துவதை தவிர்ப்பதுடன், டெரிகாட்டன், டெரிலின் போன்ற எளிதில் தீப்பற்றும் ஆடைகள் அணியக்கூடாது.

சிறுவர்கள் பட்டாசு கொளுத்தும்போது அருகில் ஒரு வாளி தண்ணீர் வைத்திருக்க வேண்டும். மேலும், சிறுவர்கள் பட்டாசு வெடிக்கும் போது பெரியவர்கள் முன்னிலையில் மட்டுமே வெடிக்க வேண்டும். பட்டாசுகளை கொளுத்தி கையில் வைத்துக்கொண்டோ, உடலுக்கு அருகில் வைத்தோ வெடிக்க வேண்டாம்.

கூட்டமான பகுதிகள், சாலைகள் மற்றும் பட்டாசு விற்பனை கடைகள் அருகில் பட்டாசு வெடிக்க வேண்டாம். மருத்துவமனைகள், பெட்ரோல் பங்க்குகளுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை அறவே தவிர்க்க வேண்டும். விலங்குகளை துன்புறுத்தும் வகையிலும், அவை பயப்படும் வகையிலும் பட்டாசு வெடிக்கக்கூடாது.மேலும், தீபாவளி பண்டிகையின் போது போலியான பொருட்களை குறைந்த விலைக்கு விற்பவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

கூட்டம் கூடும் பகுதியில் பிக்பாக்கெட், திருடர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.பஜார் மற்றும் கடைத் தெருவில் பொருட்களை வாங்கும் போது, கவனத்துடன் இருக்க வேண்டும், அப்பகுதியில் குழந்தைகளை அழைத்துச் செல்லும் போது அவர்களைக் கண்காணிக்க வேண்டும். மேலும், அச்சமயங்களில் குழந்தைகளுக்கு விலை உயர்ந்த அணிகலன்களை அணிவித்து கூட்டிச் செல்லக் கூடாது. தீபாவளி பண்டிகையின் போது தமிழக அரசின் கொரானா கட்டுப்பாட்டு விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும்.


Tags

Next Story