மதுரை அருகே சிறந்த ஊராட்சிக்கு விருது
![மதுரை அருகே சிறந்த ஊராட்சிக்கு விருது மதுரை அருகே சிறந்த ஊராட்சிக்கு விருது](https://www.nativenews.in/h-upload/2022/04/24/1522134-img-20220424-wa0021.webp)
மதுரை மாவட்டம் மேற்கு ஊராட்சிமன்ற ஒன்றியத்தைச் சேர்ந்த சின்னபட்டி ஊராட்சியில் இன்று நடைபெற்ற சிறப்பு கிராம சபா கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் அனிஸ்சேகர்
சிறந்த கிராம ஊராட்சியாக தேர்ந்தெடுக்கப்பட்ட சின்னப்பட்டிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் விருது வழங்கப்படவுள்ளது
மதுரை மாவட்டம் மேற்கு ஊராட்சிமன்ற ஒன்றியத்தைச் சேர்ந்த, சின்னபட்டி ஊராட்சியில் இன்று நடைபெற்ற சிறப்பு கிராம சபா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.அனீஷ் சேகர் தெரிவித்ததாவது:-
கிராமங்களில், எடுக்கப்படும் முக்கியமான முடிவுகள் அனைத்தும் அங்கு நடைபெறும் கிராம சபையில் தான் விவாதித்து முடிவு செய்யப்படும். ஏனெனில், கிராமத்தினுடைய உயர்மட்ட குழுவே கிராம சபைதான். தேசிய அளவிலான பஞ்சாயத்து விருது சின்னப்பட்டி ஊராட்சிக்கு கிடைத்துள்ளது என்பது மிகவும் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கிறது. கிராமசபை உறுப்பினர்களுடைய அனைவரது முழு பங்களிப்பினால் தான் இந்த விருதினை பெற முடிந்தது. தமிழ்நாடு முதலமைச்சர் கரங்களில் இவ்விருதினை ஊராட்சி தலைவர் பெற இருக்கிறார்.
வழக்கமாக ஆண்டுக்கு நான்கு நாட்கள் கிராம சபை கூட்டமானது நடைபெறும். பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை இன்று நடைபெறுகிறது. சாலை வசதி, பாதுகாக்கப்பட்ட குடிநீர், சுகாதாரமான சுற்றுப்புறம் உள்ளிட்ட மக்களுக்கான அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்வது கிராம நிர்வாகம் தான். அதனால், கிராம நிர்வாகம் எந்தளவிற்கு சிறப்பாக செயல்படுகிறதோ அந்த அளவிற்கு மக்களனைவரும் பயன்பெறுவர். கிராம நிர்வாகத்தின் திறமைகளை வளர்க்கும் வகையிலும், ஊக்குவிக்கும் வகையிலும் உறுப்பினர்களுக்கும், தலைவர்களுக்கும் பல்வேறு வகையான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
தமிழ்நாடு முதலமைச்சர், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தை மீண்டும் செயல்படுத்தியுள்ளார்கள். ஒவ்வொரு கிராமத்தினுடைய அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கு நிதி ஒதுக்கீடு செய்து திட்டங்களை செயல்படுத்த உத்தரவிட்டுள்ளார்கள். வீடற்ற ஏழை எளிய மக்களுக்கு கலைஞரின் வீடு திட்டத்தின் கீழ் வீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா பெருந்தொற்றின் பிடியிலிருந்து படிப்படியாக மீண்டு வரும்வேளையில் கொரோனா நோய்த் தொற்றின் அடுத்த அலை வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதால் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம், தனிமனித இடைவெளி உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும். தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத நபர்கள் சிறப்பு தடுப்பூசி முகாம்களை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். தொற்று நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும் அதேவேளையில் தொற்றா நோய்களாகிய இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய்களிலிருந்தும் நம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியல், மாவட்ட ஊராட்சிக்குழுத்தலைவர் சூரியகலா , மேற்கு ஒன்றியக்குழுத் தலைவைர் வீரராகவன் , சின்னபட்டி ஊராட்சித்தலைவர் சக்திமயில் , மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை கூடுதல் இயக்குநர்அருள்மணி , திட்ட இயக்குநர் அபிதா ஹனிப் , திட்ட இயக்குநர் மகளிர் திட்டம் காளிதாசன் , செய்பொறியாளர் இந்துமதி , உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) செல்லதுரை , வட்டார வளர்ச்சி அலுவலர் சுந்தரசாமி,சாந்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu