வாடிப்பட்டி அருகே சாலையில் கற்களை கொட்டுவதால் அவதியுறும் மக்கள்
மதுரை அருகே தார்ச்சாலை பணிகளுக்காக கொட்டப்பட்டுள்ள ஜல்லிக்கற்கள்
மதுரை மாவட்டம், பாலமேடு- வாடிப்பட்டி தார் சாலை மராமத்து பணியில் தார் இல்லாமல், ஜல்லி கற்களை மட்டும் பரப்பியுள்ளதால் பொதுமக்கள் சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம், பாலமேடு முதல் வாடிப்பட்டி வரை உள்ள பிரதான சாலை குண்டும் குழியுமாக இருந்தது .இதனால், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்த நிலையில் புதிய தார் சாலை அமைக்க வேண்டும் என, இப்பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர். இதனைத் தொடர்ந்து, நெடுஞ்சாலை துறை சார்பில் ஏற்கெனவே உள்ள சாலையில் மராமத்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவிற்கு குண்டும்,குழியுமாக உள்ள பள்ளங்களில் பேட்ஜ் ஒர்க் என்ற பெயரில் ஜல்லி கற்களை கொட்டி மேவி விட்டு செல்கின்றனர். தார் ஊற்றாமல் ஜல்லி கற்களை மட்டும் கொட்டி விட்டு சென்றதால் ,கற்கள் முழுதும் பெயர்ந்து சாலை முழுவதும் கற்களாகவே காட்சியளிக்கிறது. இதனால், அந்தப் பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடன் செல்கின்றனர்.
இதனால் ,இரு சக்கர நான்கு சக்கர வாகனங்கள் பழுதாகி வருவதாக வாகன ஓட்டிகள் புலம்புகின்றனர். மேலும், மராமத்து பணி என்ற பெயரில் நடக்கும் முறைகேடுகளை கண்டும் காணாமல் இருக்கும் நெடுஞ்சாலைத்துறையினரின் செயலால் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். ஆகையால், மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு, முறையாக மராமத்து பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து தார்ச்சாலையை தரமாகச் செப்பனிட வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu