மேலக்கால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகள் அலைக்கழிப்பா?
மேலக்கால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகள் அலைகழிக்கப்படுவதாக எழுந்துள்ள புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஒன்றியம் மேலக்கால் ஊராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்குமேலக்கால் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் இதன்மூலம் பயன் பெற்று வருகின்றனர். கடந்த சில நாட்களாக இங்குள்ள மருத்துவ பணியாளர்கள் உள் நோயாளிகள் மற்றும் புற நோயாளிகளை தொடர்ந்து தகாத வார்த்தைகளால் திட்டித் தீர்ப்பதாவும், புதிய நோயாளிகளை அலைக்கழிப்பதாகவும், முறையாக சிகிச்சை அளிக்காமல் திருப்பி அனுப்புவதாகவும் புகார் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, இரவு நேரத்தில் சிகிச்சைக்கு வருபவர்களை மருத்துவ பணியாளர்கள் சிகிச்சை அளிக்க மறுத்து, அவர்களை காலையில் வந்து சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு திருப்பி அனுப்புவதாகவும் கூறப்படுகிறது.
இதனால், கிராமத்தில் உள்ள ஏழை எளிய பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தச்செயல் ஏழை எளிய மக்களை தனியார் மருத்துவமனைகளை நாடிச்செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவதாகவும், இது தனியார் மருத்துவமனைகளுக்கு மறைமுகமாக ஆதரவளிப்பதை உணர முடிவதாகவும் புகார் தெரிவிக்கின்றனர். இது குறித்து, மாவட்ட அலுவலர், தலைமை மருத்துவர் அலுவலர் நேரில் விசாரணை செய்து முறையாக சிகிச்சை அளிக்க உத்தரவிட வேண்டும். மேலும், மருந்து மாத்திரைகளை பற்றாக்குறை இல்லாமல் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஸ்சேகர், மருத்துவத்துறை இணை இயக்குநர் ஆகியோர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu