அத்தாணி அருகே திருட்டில் ஈடுபட்ட வேலையில்லா பட்டதாரி கைது

அத்தாணி அருகே திருட்டில் ஈடுபட்ட வேலையில்லா பட்டதாரி கைது
X
கைது செய்யப்பட்ட கார்த்தி.
ஈரோடு மாவட்டம் அத்தாணி அருகே பெண்ணிடம் தங்க தாலி சங்கிலியை பறித்த வேலையில்லா பட்டதாரியை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அடுத்த அத்தாணி அருகேயுள்ள கருப்பகவுண்டன்புதூரை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி விஜயலட்சுமி (50). இவர்கள் இருவரும் கடந்த 18ம் தேதி வெளியூர் சென்று விட்டு வீடு திரும்பினர். அப்போது, சக்திவேல் வீட்டில் இருந்து வெளியே சென்ற நிலையில் மதியம் சுமார் 1.30 மணியளவில் விஜயலட்சுமி மட்டும் வீட்டில் இருந்துள்ளார்.

மதியம் டி.வி. பார்த்துக் கொண்டிருந்த விஜயலட்சுமி தனியாக இருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர் ஒருவர் வீட்டிற்குள் நுழைந்து மிளகாய்பொடியினை முகத்தில் தடவி விட்டு கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க தாலி சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பியோடியுள்ளார். இதனையடுத்து இச்சம்பவம் குறித்து விஜயலட்சுமி ஆப்பக்கூடல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.இதுகுறித்து ஆப்பக்கூடல் போலீசார் சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து, குற்றவாளியை போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில், இன்று குற்றத்தடுப்பு நடவடிக்கையாக வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது, சந்தேகத்திற்கு இடமாக இருசக்கர வாகனத்தில் வந்த நபரை பிடித்து, விசாரித்ததில், கள்ளிப்பட்டி அருகே உள்ள ஏரங்காட்டூர் வலையபாளையத்தை சேர்ந்த கார்த்தி (29‌), பொறியியல் பட்டதாரியான இவர் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்தது தெரியவந்தது.

மேலும், இவர் அத்தாணி கருப்பகவுண்டன்புதூரை சேர்ந்த விஜயலட்சுமி என்பவரிடம் தங்க சங்கிலியை பறித்துச் சென்றது விசாரணையில் உறுதியானது. இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்து 7 பவுன் தங்க தாலி சங்கிலியையும், இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்த போலீசார், கார்த்தியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
the future of ai in healthcare