பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா பாதுகாப்பு பணிக்கு குடிபோதையில் வந்த 2 போலீஸ் ஏட்டுகள் பணியிடை நீக்கம்!

பைல் படம்.
பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா பாதுகாப்பு பணிக்கு குடிபோதையில் வந்த 2 போலீஸ் ஏட்டுகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் குண்டம் விழா கடந்த 8ம் தேதி நடைபெற்றது. இதையொட்டி, கோவிலில் ஈரோடு உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
அதன்படி, ஈரோடு கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்தை சேர்ந்த 2 ஏட்டுகள் சுரேஷ், பிரபாகரன் ஆகியோருக்கு கோவில் நுழைவாயில் பகுதியில் பணி ஒதுக்கப்பட்டிருந்தது. நள்ளிரவு 12 மணிக்கு பணிக்கு வர வேண்டும். ஆனால், அவர்கள் அதிகாலை 3 மணிக்கு சீருடையுடன் வாகனம் நிறுத்துமிடம் இடத்துக்கு காரில் வந்தனர்.
அப்போது, அங்கு திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த காவல் துணை கண்காணிப்பாளர் ஒருவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டபோது, அந்த காரை நிறுத்தி பார்வையிட்டார். அப்போது, காரில் இருந்த 2 பேரும் போலீஸ்காரர்கள் என்பது தெரியவந்தது. அவர்களுக்கு குண்டம் விழாவில் பாதுகாப்பு பணி ஒதுக்கப்பட்டு இருந்ததும், அந்த பணியில் ஈடுபடாமல் குடிபோதையில் காரில் சுற்றி வந்ததும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, போலீஸ் ஏட்டுகள் சுரேஷ், பிரபாகரன் ஆகியோரை போலீசார் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு, அவர்கள் குடிபோதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது. அதன்பிறகு, 2 பேர் மீதும் துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டது.
இந்தநிலையில், குடிபோதையில் பாதுகாப்பு பணிக்கு வந்ததாக போலீஸ் ஏட்டுகள் சுரேஷ், பிரபாகரன் ஆகிய 2 பேரையும் பணியிடை நீக்கம் செய்து ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தர விட்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu